6வது எம்.பி சீட்டுக்கு கனிமொழியை எதிர்த்து டி.ராஜா போட்டி

தமிழகத்தில் 6 இடங்களுக்கு ராஜ்யசபா தேர்தல் நடக்கிறது. இதில் ஐந்து இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது. 6வது இடத்துக்கு திமுக சார்பில் கனிமொழி நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு அவரது கட்சியின் ஆதரவு மட்டும்போதாது, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது.
இந்த நிலையில் 6வது இடத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தற்போது போட்டியில் குதித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. தமிழக சட்டசபையில் அ.தி.மு.க.வுக்கு 151 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதனால் அந்த கட்சி 4 எம்.பி.க்களை கண்டிப்பாக தேர்வு செய்ய முடியும். 5-வது இடத்தில் வெற்றிபெற அ.தி.மு.க.வுக்கு இன்னும் 19 எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படுகின்றனர்.
புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சியின் தலா 2 எம்.எல்.ஏ.க்கள், ஒரு எம்.எல்.ஏ.வை வைத்துள்ள பார்வர்டு பிளாக் ஆகியவற்றிடம் ஆதரவு கோரியுள்ளது. தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரின் ஆதரவும் அ.தி.மு.க.வுக்கு கிடைக்கும்.
தி.மு.க.வுக்கு 23 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர். இதனால் மேலும் 11 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. 5 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டுள்ள காங்கிரசிடம் ஆதரவு கோரியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் தி.மு.க. பார்லிமென்ட் குழு தலைவர் டி.ஆர்.பாலு பேசியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் திடீர் திருப்பமாக இந்திய கம்யூனிஸ்ட் போட்டியில் குதித்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பொறுத்தவரை, ஒரு கட்சி எடுக்கும் முடிவை, மறு கட்சி ஆதரிக்க வேண்டும். எனவே தற்போது டி.ராஜா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளால் அவருக்கே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே திமுகவுக்கு இது பின்னடைவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி.ராஜா போட்டியிடுவார் என்ற தகவலை இன்று மாநில செயலாளர் தா.பாண்டியனும், அகில இந்திய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டியும் சேர்ந்து அறிவித்தனர்.
6வது இடத்துக்கு தி.மு.க.வும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடும் நிலை ஏற்பட்டிருப்பதால் போட்டியில் தற்போது 7 பேர் உள்ளனர். எனவே 27-ந்தேதி தேர்தல் நடைபெறும் நிலை உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications