போட்டியிடுகிறேன் என்று நான் உங்ககிட்ட சொன்னேனா...தா.பாண்டியன் கடும் பாய்ச்சல்!

சென்னையில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜ்யசபா தேர்தல் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் தா.பாண்டியன் பேசினார்.
செய்தியாளர்கள் கேள்விகளைக் கேட்பதற்கு முன்பு தா.பாண்டியன் பேசுகையில்,
தமிழகத்தில் இன்னும் மின் வெட்டுப் பிரச்சினை ஓயவில்லை. பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. ஆனால் கடந்த சில மாதங்களாக இல்லாத ஒன்றைச் சொல்லி, ஏதோ தங்கப் பழத்தை நரி பறிக்க முயல்வது போல கார்ட்டூன் எல்லாம் போட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குறித்து அவதூறு செய்திகளை கிட்டத்தட்ட அத்தனை ஊடகங்களும் வெளியிட்டன.
நான் போட்டியிட முயல்வதாக, நான் முயற்சிப்பதாக செய்திகள் போடப்பட்டன. இந்த செய்திகளை உங்களுக்குத் தந்தவர் யார்.. நான் போட்டியிடப் போகிறேன் என்று நான் உங்களிடம் சொன்னேனா... ஆனால் நான் போட்டியிட முயல்வதாக கற்பனையாக செய்திகளை வெளியிட்டு வந்தீர்கள்.
இப்போது நான் தெளிவாகச் சொல்கிறேன். ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர் தொடர்பாக எனது பெயரை கட்சியின் மத்திய நிர்வாகக் குழுவோ, செயற்குழுவோ எந்தக் கட்டத்திலும் பரிசீலிக்கவே இல்லை. நான் போட்டியிட விரும்புவதாக நான் முன்மொழியவில்லை. எனவே விவாதத்திற்கே இடமில்லை.
எனவே உட்கட்சி மோதல், சண்டை, போட்டி என்றெல்லாம் பேச்சுக்கே இடமில்லை. நேற்று வரை கற்பனைக் கதைகளை எழுதினீர்கள். இன்று முதல் அதைக் கைவிட்டு விடுங்கள். உங்களிடம் நான் போட்டியிட முயன்றேன் என்பதற்கு ஆதாரம் இருந்தால் அதைச் சொல்லி என்னிடம் கேளுங்கள்.
கட்சிக்குள் பாக்ஸிங்கெல்லாம் நடக்கவில்லை. கட்சியின் மத்திய நிர்வாகக் குழு இப்போது வேட்பாளரைத் தேர்வு செய்து அறிவித்துள்ளது. எனவே இத்துடன் உங்களது கற்பனை முடியட்டும் என்றார் தா.பாண்டியன்.
உங்களது வேட்பாளருக்கு எத்தனை பேரின் ஆதரவு உள்ளது என்ற கேள்விக்கு தா.பா பதிலளிக்கையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8 உறுப்பினர்கள் உள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சிக்கு 10 பேர் உள்ளனர். எனவே 18 வாக்குகள் உறுதி. எங்களது கூட்டணியில் பார்வர்ட் பிளாக் உள்ளது. அக்கட்சிக்கு ஒருவர் இருக்கிறார். அவரையும் சேர்த்தால் 19 பேரின் வாக்குகள் வரும் என்றார்.
மேலும் யாராவது ஆதரவு தெரிவிக்கிறார்களா என்ற கேள்விக்கு கூடுதலாகவும் வரலாம், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் எங்களுக்கு வாக்களிக்கலாம். எங்களுக்கு குதிரை பேரத்தின் மீது நம்பி்க்கை இல்லை என்றார் தா.பா.












Click it and Unblock the Notifications