குஜராத் கலவரத்திற்கு மோடியை எப்படி குறை கூற முடியும்... கேட்கிறார் ராஜ்நாத் சிங்

மேலும் நிதீஷ் குமாருக்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மோடியை காரணம் காட்டியே தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பிரிந்துள்ளது ஐக்கிய ஜனதாதளம். இது பாஜக தரப்பில் எதிர்பார்க்கப்பட்ட காரணம்தான். இந்த நிலையில் மோடியைக் குறை கூறுவதற்கு பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜ்நாத் சிங் கூறுகையில், பொதுத் தேர்தலை வெற்றிகரமாக சந்திக்கும் நோக்கில்தான் நரேந்திர மோடியை பாஜக தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக நியமித்தோம். இதில் என்ன தவறு...ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தல் பிரசாரக் குழு உள்ளது. அதற்குத் தலைவர்களும் உள்ளனர். இது தவறா.. இதற்குப் போய் நீண்ட கால உறவை முறித்துக் கொள்ளலாமா...
நரேந்திர மோடியை பிரசாரக் குழுத் தலைவராக நியமித்ததன் மூலம் நாங்கள் மதச்சார்பான ஒருவரை நியமித்ததாக எப்படிக் கூறலாம். குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்த கலவரம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆனால் அதற்கு எப்படி முதல்வர் பொறுப்பாவார்...?
இப்படிப்பட்ட வன்முறைகள் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடக்கவில்லையா. ஆனால் அப்படி நடந்தால் அதை மதக் கலவரம் என்று யாரும் சொல்வதில்லையே...
கூட்டணிகள் நம்பிக்கையின் அடிப்படையில்தான் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு கூட்டணியும் நம்பிக்கையின் பேரில்தான் நீடிக்கின்றன.
2000மாவது ஆண்டு நடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு 67 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தனர். ஐக்கிய ஜனதாதளத்திற்கோ 34 பேர் மட்டுமே இருந்தனர். அப்போது நாங்கள் சொன்னோம், பாஜகவின் தம்பிதான் ஐக்கிய ஜனதாதளம். பீகார் முதல்வராக ஐக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்த ஒருவரே வர வேண்டும் என்றும் சொன்னோம். நிதீஷ் குமாரை முதல்வராகவும் ஏற்றுக் கொண்டோம்.
ஆனால் இப்போது கூட்டணியை முறிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது. நாங்கள் செய்த தவறுதான் என்ன.. எங்களுடைய 17 ஆண்டு கால உணர்ச்சிப்பூர்வமான உறவை அவர்கள் முறித்துப் போட்டு விட்டனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications