மத்திய அமைச்சரவை மாற்றம்- சுதர்சன நாச்சியப்பன் உட்பட 8 பேர் பதவியேற்பு!
டெல்லி: மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன் உட்பட 8 பேர் புதிய அமைச்சர்களாக இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
யார் யார்?
டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று மாலை நடைபெற்ற விழாவில் முதலில் கேபினட் அமைச்சர்களாக சிஸ்ராம் ஒலா, ஆஸ்கர் பெர்னாண்டஸ், கிரிஜா வியாஸ் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கே.எஸ். ராவ் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதேபோல் இணை அமைச்சர்களாக மாணிக் ராவ் காவித், திருமதி சந்தோஷ் செளத்ரி, தமிழகத்தைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன், ஜேசுதாஸ் சீலம் ஆகியோர் பதவியேற்றனர்.
அமைச்சரவை இலாகா
தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சராக சிஸ்ராம் ஒலா, ஆஸ்கர் பெர்னாண்டஸுக்கு நெடுஞ்சாலைப் போக்குவரத்து துறை, கிரிஜா வியாஸுக்கு வீட்டு வசதித் துறை மற்றும் நகர்ப்புற மேம்பாடு, கே.எஸ்.ராவுக்கு ஜவுளித் துறை அமைச்சகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை மாற்றத்துக்கு முன்னோட்டமாக மத்திய வீட்டு வசதித் துறை மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சர் அஜய் மக்கேன் நேற்று முன் தினம் தமது பதவியை ராஜினாமா செய்தார். அதைப் போல நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சி.பி. ஜோஷியும் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து இன்று மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுவே லோக்சபா தேர்தலுக்கு முந்தைய கடைசி அமைச்சரவை மாற்றம் எனத் தெரிகிறது.
மத்திய அரசுக்கு தந்த ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் திமுகவும் வாபஸ் பெற்ற பின்னர் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் வகித்துவந்த அமைச்சர் பதவிகளுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை. ஆனால் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மூத்த அமைச்சர்களுக்கு அந்த துறைகள் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டன. இதனால் அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
திமுகவைச் சேர்ந்த ஐந்து அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தார்கள். மத்திய ரசாயன மற்றும் உர துறை அமைச்சராக இருந்த மு.க.அழகிரியைத் தவிர மற்றவர்கள் இணை அமைச்சர்கள். ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா, தயாநிதி மாறன் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். ரயில்வே வாரிய உறுப்பினர் நியமன விவகாரத்தில் பவன்குமார் பன்சால் ராஜினாமா செய்தார். நிலக்கரி சுரங்க உரிம முறைகேடு தொடர்பான சிபிஐ விசாரணையில் தலையிட்டதால் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வினி குமார் பதவி இழந்தார்.
மேலும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக உள்ள ஜெய்ராம் ரமேஷ் கட்சிப் பணிக்கு அனுப்பப்படுவார் எனக் கூறப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துதல் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னர் அவர் அமைச்சர் பதவியை விட்டு விலகி கட்சிப் பொறுப்பேற்பார் எனவும் தகவல் பரவியது. அதேபோல் அவர் இன்று மாற்றப்படவில்லை.
அத்துடன் கர்நாடக முதல்வர் பதவியை எதிர்பார்த்த மல்லிகார்ஜூன் கார்கேவிற்கு ரயில்வே துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை அவர் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தார்.












Click it and Unblock the Notifications