இலங்கை: தமிழர்கள் பகுதியில் செப்டம்பரில் தேர்தல்... அரசு அறிவிப்பு
டெல்லி: இலங்கையில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு பகுதியில் செப்டம்பருக்குள் மாகாண கவுன்சில் தேர்தல் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இலங்கையில் விடுதலை புலிகளுடன் நடந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பின், அங்கு இந்திய அரசின் உதவியுடன் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, அந்நாட்டு அரசியல் சட்டத்தின் 13வது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளபடி தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. இதன்காரணமாக, மாகாண கவுன்சிலுக்கு அதிகாரம் அளிக்கும் 13வது திருத்தத்தை மாற்றியமைக்க புதிய சட்டமசோதாவை கொண்டு வரவிருக்கிறது.
இந்த நிலையில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியான வடக்கு மாகாண கவுன்சிலுக்கு வரும் செப்டம்பருக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று அந்நாட்டு செய்தித் துறை அமைச்சர் கேகெலிய ரம்புகெவல்லா கூறியுள்ளார். புதிய சட்டமசோதா மீது ஒருமித்த கருத்து ஏற்படா விட்டாலும் செப்டம்பருக்குள் தேர்தலை முடித்து விட அரசு உறுதியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே இலங்கை அதிபர் ராஜபக்சே சனிக்கிழமையன்று தமிழர்களின் பகுதியான கிளிநொச்சிக்கு சென்றார். கிளிநொச்சியை கொழும்புவுடன் இணைக்கும் 153 கி.மீ. நெடுஞ்சாலையை அவர் திறந்து வைத்து பேசினார். அப்போது அவர், ‘30 ஆண்டு போரில் அழிக்கப்பட்ட எல்லாவற்றையும் மீண்டும் கொண்டு வருவோம். போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை நீங்கள் உணர வேண்டும்' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications