இலங்கை சிறையில் உள்ள 57 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமருக்கு ஜெ. கடிதம்
சென்னை: இலங்கை சிறையில் வாடும் 57 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
இந்திய கடல் பகுதிதயில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், கைது செய்து சிறை வைப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
இது பற்றி தொடர்ந்து உங்களுக்கு கடிதம் மூலமாக தெரிவித்து வருகிறேன். எனினும், மத்திய அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த சம்பவத்தில் இந்திய அயலுறவுத் துறை அமைச்சகம் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது.
மத்திய அரசின் மௌனத்தை சாதகமாக எடுத்துக் கொண்டு இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களுக்கு தொடர்ந்து துன்புறுத்தல்களை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஜூன் 5ம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த 49 மீனவர்களை இலங்கை பிடித்துச் சென்று சிறையில் அடைத்துள்ளது.
மேலும், கடந்த 15ம் தேதி 8 தமிழக மீனவர்களை கைது செய்து 12 நாள் நீதிமன்றக் காவலில் வைத்துள்ளது.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையே அழிக்கும் செயலில் இலங்கை ஈடுபட்டு வருகிறது. அவர்களை பாதுகாத்து, தமிழகத்தின் மீன்பிடி உரிமையை நிலைநாட்டும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும்.
இந்திய கடல் எல்லையில் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் மீன்பிடிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தற்போது இலங்கை சிறையில் வாடும் 57 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications