கோவையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த தாத்தா-பாட்டியின் உடல் உறுப்புகள் தானம்
கோவை: கோவையில் இருவேறு வாகன விபத்துக்களில் சிக்கி உயிரிழந்த இரு வயதான வர்களின் உடல் உறுப்புகள் குடும்பத்தினரின் முழு சம்மதத்தோடு தானம் செய்யப்பட்டன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த ரங்கசாமி கவுண்டர் என்ற 76 வயது முதியவர், சில தினங்களுக்கு முன்பு நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கினார். சத்தியமங்கலத்தில உள்ள அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்ற ரங்கசாமி, பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள கோவை மெடிக்கல் சென்டர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார் ரங்கசாமி. இதனை அதிகாரப்பூர்வமாக மருத்துவர்கள் அறிவித்த பின்னர், ரங்கசாமியின் மகன்கள் தந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அதைத்தொடர்ந்து ரங்கசாமி கவுண்டரின் 2 சிறுநீரகங்களும், 2 கண்களும் தானமாக பெறப்பட்டன.
அதேபோல், கோவை வடவள்ளியைச் சேர்ந்த கருணாம்பிகை என்ற 64 பெண் ஒருவர், விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இதனைத்தொடர்ந்து கருணாம்பிகையின் உடலில் இருந்து 2 சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் முதலியன அவர்களது உறவினர்களால் தானமாக தரப்பட்டன.
முறையாக தேவைப்படுவோருக்கு தானமாக பெறப்பட்ட இந்த உறுப்புகள் பொருத்தப்படும் என கோவை மெடிக்கல் சென்டர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications