ஆஸ்திரேலியாவில், அடிக்கடி சிறுநீர் கழிக்கச் சென்ற 3 ஊழியருக்கு சம்பளம் கட்...
மெல்பர்ன்: அலுவலக நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க சென்றதாக காரணம் காட்டி ஆஸ்திரேலியாவில், மூன்று ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட விநோதச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் உள்ளது ஏஜிஸ் ஆஸ்திரேலியா என்ற கால் சென்டர். இங்கு ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். பணிபுரியும் ஊழியர்களின் வருகைப்பதிவை கணக்கிடவும், பணி நேரத்தில் ஊழியர்கள் இருக்கைகளிலிருந்து அனாவசியமாக எழுந்து செல்லாமல் இருக்கவும் பல நவீன வசதிகளைச் செய்து வைத்துள்ளது நிர்வாகம்.
ஒவ்வொரு ஊழியரின் மேஜையிலும் பொருத்தப்பட்டுள்ள எலக்ட்ரானிக் கருவி மூலம் ஊழியர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வருகிறது நிர்வாகம். அதன்படி, எக்காரணத்துக்க்காகவும் ஊழியர் தன் இருக்கையை விட்டு 90 வினாடிகளுக்கு மேல் எழுந்து செல்ல முடியாது. மீறிச் சென்றால், அவர்களின் கணனி தானாகவே லாக் ஆகிவிடுமாம். எழுந்து சென்றதற்கான காரணத்தை பதிவுசெய்த பின்னரே கணனி மீண்டும் செயல்படத் தொடங்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளதாம்.
சமீபத்தில், அடிக்கடி சிறுநீர் கழிக்க சென்றதாகக் கூறி அந்நிறுவன ஊழியர்கள் மூன்று பேரின் சம்பளத்தை பிடித்து வைத்துள்ளது நிர்வாகம். இது சட்டவிரோதமானது எனக் கூறி, பாதிக்கப்பட்ட மூவரும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
விசாரணையின் போது, தன்னிலை விளக்கம் அளித்துள்ள நிறுவனம், ' தங்கள் நிறுவனத்தில் உணவு இடைவேளை, தேனீர் இடைவேளை, மாலையில் ஒரு முறை இடைவேளை என பல சலுகைகளை தரப் படுகின்றன. ஊழியர்கள் அனாவசியமாக தங்கள் இருக்கையிலிருந்து, எழுந்து செல்வதால் பணி பாதிக்கப்படுகிறது. எனவே தான், சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டது' என தெரிவித்துள்ளது.
நிர்வாகத்தின் இந்த விளக்கத்திற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததை யடுத்து, 'இயந்திரக் கோளாறு காரணமாகவே சம்பளத்தில் பிடித்தம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி சமாளித்துள்ளது நிர்வாகம். மேலும், பிடித்தம் செய்யப்பட்ட மூன்று ஊழியர்களின் சம்பளத்தையும் திருப்பி வழங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications