ராகுல் பிரதமரானால் மகிழ்ச்சி அடைவேன்- மன்மோகன் சிங்
டெல்லி: ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு உயர்ந்தால் நான் மகிழ்ச்சிஅடைவேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
நேற்று நடந்த அமைச்சரவை மாற்றத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும். மக்கள் எங்கள் மீது மீண்டும் நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுப்பார்கள்.

காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு, எனது பிரதமர் பதவியை வழங்கி வழிவிட தயாராக இருக்கிறேன். இதை நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன்.ராகுல் காந்தி இயற்கையான தலைவர். அந்த இளம் தலைவர், எனது பதவியை அடைவது எனக்கு மகிழ்ச்சிதான். ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வழி நடத்திச் செல்வார் என்று நம்புகிறேன். அவருக்கு தலைவருக்கான நல்ல குணங்கள் உள்ளன.
பா.ஜ.க கூட்டணியில் ஏற்பட்ட பிளவு, அந்த கூட்டணியின் உள் விவகாரம். அதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. ஆனால், பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், மதச்சார்பற்ற தலைவர். அரசியலில் நிரந்தர நண்பரோ, நிரந்தர எதிரியோ கிடையாது. எனவே, ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகள், காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதை வரவேற்கிறோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications