சிங்களப்படையினருக்கு ராணுவப்பயிற்சி அளிப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது : திருமா
சென்னை: சிங்களப் படையினருக்கு தமிழகத்தில் ராணுவப் பயிற்சி அளிப்பது, வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. இது, தமிழினத்தை சின்னாபின்னமாக சிதைத்த சிங்கள இனவெறி அரசின் செயல்களை ஊக்குவிப்பது போல் உள்ளது என கண்டனம் தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.
இது குறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ உதகையிலுள்ள வெலிங்டன் ராணுவப்பயிற்சி பள்ளியில் கடந்த 7-6-2013 முதல் சிங்கள படையை சார்ந்த இருவருக்கு பயிற்சிளித்து வருகிறது. மேலும் நான்கு பேருக்கு பயிற்சியளிக்க இருப்பதாகவும் தெரிய வருகிறது.
இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கையானது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை தொடர்ந்து அவமதிப்பதாகவே உள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான வெளியுறவு கொள்கையின் அடிப்படையில் நட்புறவாகவுள்ள நாட்டின் ராணுவத்தினருக்கு பயிற்சியளிப்பது வழக்கமான நடைமுறையே என இந்திய அரசு வாதிடுவது,
வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. தமிழினத்தை சின்னாபின்னமாக சிதைத்த சிங்கள இனவெறி அரசின் போக்கை உலகின் பல்வேறு நாடுகள் வெளிப்படையாக கண்டித்துள்ள நிலையிலும், இந்திய அரசு மட்டும், சிங்களவர்கள் நடத்திய இனப்படுகொலையை அங்கீகரிப்பதைப் போலவும், ஊக்கப்படுத்துவதைப்போலவும் நடந்துகொள்வது மனிதநேயமற்ற அணுகுமுறையாகவே உள்ளது.
இந்திய அரசின் இத்தகைய சிங்கள ஆதரவு போக்கினை விடுதலைச்சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது. அத்துடன், தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, சிங்களப்படை அதிகாரிகளை உடனடியாக வெளியேற்ற வேண்டுமெனவும், இனிமேல் சிங்களவர்களுக்கு இந்தியாவில் இத்தகைய பயிற்சியளிக்க கூடாது எனவும் விடுதலைச்சிறுத்தைகள் வற்புறுத்துகிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications