வடமாநில வெள்ளம்: பலி எண்ணிக்கை 130 ஆக உயர்வு… 90 தமிழக யாத்ரீகர்கள் தவிப்பு
கேதார்நாத்: வடமாநிலங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130ஐ தாண்டியுள்ளது.
தென் மேற்கு பருவ மழை வட இந்தியாவில் தீவீரமடைந்துள்ளது. தொடர்ந்து சில நாட்களாக கன மழையும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் வட மாநிலங்கள் குறிப்பாக இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
உத்தரகாண்ட் மாநிலமே வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல நகரங்கள் தீவுகள் போல காட்சி அளிக்கின்றன.

72000 பக்தர்கள் தவிப்பு
பிரசித்தி பெற்ற புனித தலங்களான கேத்ரிநாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவற்றுக்கு ஆன்மிக யாத்திரை மேற்கொண்டிருந்த தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நடுவழிகளில் வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் சிக்கி தவிக்கின்றனர்.

கேதார்நாத் நிலச்சரிவு
கேதர்நாத் கோயில் உள்ள பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு அப்பகுதியை கடுமையாக பாதித்துள்ளது. அந்தக் கோயிலுக்குச் சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள், வெளியேற முடியாமல் தவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேதர்நாத் கோயிலின் சுற்றுச்சுவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. கேதர்நாத் கோயில் பகுதியில் மீட்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருவதாக மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணிகள்
உத்தரகாண்டில் மீட்புப் பணிகளை மேற்கொள்வது குறித்து, முதலமைச்சர் விஜய் பஹுகுணா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. பின்னர், சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்ட முதலமைச்சர் பஹுகுணா, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இதுவரை 130
இதனிடையே, உத்தரகாண்ட் மாநிலத்தில் மட்டும் 60க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமாநில மழை வெள்ளத்திற்கு இதுவரை 130 பேர் வரை உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஏராளமானோரைக் காணவில்லை.

ராணுவத்தின் உதவி
உத்தரகாண்ட் மற்றும் ஹிமாச்சலில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணியில் ராணுவமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்கள் மூலம், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழக பக்தர்கள்
தமிழகத்தை சேர்ந்த 90 பக்தர்கள் உத்தரகாண்ட் வெள்ளப்பகுதியில் சிக்கி இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியை சேர்ந்த சிவபிரகாசம் என்பவரது தலைமையில் சென்னை பல்லாவரம், சைதாப்பேட்டை, மைலாப்பூர், பாரிமுனை, தண்டையார்பேட்டை, குன்றத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து 52 பேர் புனித யாத்திரை சென்றிருந்தனர். இந்த 52 பேரில் 30 பெண்கள், 22 ஆண்கள் உள்ளனர்.

பத்ரிநாத் போகவில்லை
இவர்கள் கன மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர்.தற்போது பத்திரமான நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் டெல்லி வரும் வரை எதுவும் உறுதி இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். பத்ரிநாத் செல்ல வேண்டிய பக்தர்கள் இவர்கள். ஆனால் பெரும் வெள்ளம் காரணமாக அவர்கள் பத்ரிநாத் போகாமல் கேதார்நாத்தில் தங்கியுள்ளனர்.
இதேபோல மேலும் பல பக்தர்கள் அங்கு மாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications