சிங்களர்களின் லண்டன் வெறி.. ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழர்கள் மீது கொலை வெறித் தாக்குதல்
லண்டன்: லண்டனில் இலங்கை கிரிக்கெட் அணியைப் புறக்கணிக்க வலியுறுத்தியும், இலங்கையில் தொடர்ந்து நடைபெறும் தமிழ் இன அழிப்புக்கு எதிராக சர்வதேச விசாரணை கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்திய ஈழத் தமிழர்கள் மீது சிங்கள இனவெறியர்கள் தாக்குதல் நடத்திய செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிங்களர்களின் இந்த செயலுக்கு இங்கிலாந்து தமிழ் இளையோர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
லண்டனில் இலங்கை கிரிக்கெட் அணியைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தியும் மற்றும் இலங்கையில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் தமிழர்கள் மீதான இன அழிப்புக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டியும் நேற்று லண்டன் வாழ் ஈழதமிழர்களால் லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது மைதானத்துக்கு முன்பாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் நிகழ்த்தப்பட்டது.
அப்போது, இலங்கை அணியினை பார்வையிட சென்ற சிங்களவர்களால் அமைதியான முறையில் நடைபெற்றுக்கொண்டு இருந்த கவனியீர்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஈழத்தமிழர் மீது காவல்துறையினரையும் தாண்டி சிங்கள காடையர்களால் தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
இத் தாக்குதலின் போது கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்குகொண்ட சிறுமியை காலால் எட்டி உதைத்தும் சிறுவனை அடித்தும் மேலும் அங்கு நின்றவர்களை பலமாக தாக்கியும் உள்ளனர். மற்றும் சிங்கள காடையர்களால் அநாகரிகமான வார்த்தைகளால் பேசியும் சைகை மூலமாக காட்டியும் சென்றுள்ளனர்.
தமிழர் தாயகத்தில் சிங்களம் எவ்வாறு எமது மக்களை அடக்கி அடிமைப்படுத்தவும் எமது நிலங்களை பறித்தும் கலாச்சாரத்தை சீர்கெடுக்க முனையும் இப்பொழுதில் தமிழர்கள் செறிந்து வாழும் புலம்பெயர் நாடுகளிலும் தனது இனவெறியை காட்டி எகத்தாளம் இடுகிறது.
இவ்வேளையில் தமிழ் இளையோர் அமைப்பு சிங்கள காடையர்களின் இனவெறியை வன்மையாக கண்டிக்கும் நேரத்தில் லண்டன் காவல் துறையினரிடம் குற்ற விசாரணையை மேற்கொள்ளவேண்டியும். இலங்கையைக் கண்டித்து நடைபெறும் போராட்டங்களில் அதிகமான மக்களை பங்கு கொள்ளுமாறும் தமிழ் மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications