நிதீஷுக்கு காங்கிரஸ் ஆதரவுன்னா, அப்ப லாலுவுக்கு ஆப்பா??

நிதீஷும், லாலுவும் எதிரும் புதிருமானவர்கள். லாலுவை ஓரம் கட்டி ஒதுக்கி வைத்த பெருமைக்குரியவர் நிதீஷ் குமார். அவரிடம் இழந்த தனது கட்சி ஆட்சியை மீட்க கடுமையாக போராடி வருபவர் லாலு.
மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு லாலு ஆதரவு தருகிறார். இந்த வரிசையில் தற்போது நிதீஷும் இணையப் போகிறார். இதனால் லாலு தரப்புக்கு கடும் நெருக்கடி உருவாகவுள்ளது.
நிதீஷ் அரசு நேற்று கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது ஆதரவு தெரிவித்து காங்கிரஸின் நான்கு எம்.எல்.ஏக்களும் வாக்களித்துள்ளனர். இது லாலு தரப்பை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
இந்தப் புதிய கூட்டணி, எதிர்காலத்தில் லோக்சபா தேர்தலில் முழு அளவிலான கூட்டணியாக மாறி விடுமோ என்ற ஆச்சம் லாலு தரப்புக்கு வந்துள்ளதாம்.
நிதீஷ் குமாரை மதச்சார்பற்ற தலைவர் என்று பிரதமர் பாராட்டுவதும், அது மனதுக்கு இதமாக இருப்பதாக நிதீஷ் கூறியதையும் லாலு கட்சி அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், நிதீஷ் அரசுக்கு ஆதரவு அளித்தது அவர்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
விரைவில் மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் நிதீஷ் கட்சி இணையக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. மேலும் லோக்சபா தேர்தலிலும் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி அமைக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. எனவே லாலு தரப்பு சற்றே பீதியடைந்துள்ளது.
இருப்பினும் இதுகுறித்து பீகார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரேம்சந்த் மிஸ்ரா கூறுகையில், தார்மீக அடிப்படையிலும், மதச்சார்பற்ற அடிப்படையிலும்தான் நிதீஷ் அரசை நாங்கள் ஆதரித்தோம். மற்றபடி பீகார் அரசில் நாங்கள் பங்கேற்கும் திட்டம் இல்லை. லோக்சபா தேர்தலுக்கும் இன்னும் அவகாசம் உள்ளது. பீகார் லோக்சபா தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிடுவோம் என்றார்.
பார்க்கலாம் காங்கிரஸை வெல்வதில் ஜெயிக்கப் போவது லாலுவா அல்லது நிதீஷா என்பதை.












Click it and Unblock the Notifications