ராஜ்யசபா தேர்தல்.. வேட்புமனுவை யாரும் வாபஸ் பெறவில்லை- தேர்தல் உறுதி!

தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவடைவதால் வரும் 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 5 இடங்களை அதிமுக அணி வெல்ல இருக்கிறது. 6வது எம்.பி. இடத்துக்கு திமுகவின் வேட்பாளர் கனிமொழி, தேமுதிகவின் இளங்கோவன் ஆகியோர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
மேலும் 5 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரஸ், 3 எம்.எல்.ஏக்களைக் கொண்ட பாமக, தலா 2 இடங்களைக் கொண்ட மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகத்தின் ஆதரவைப் பெறுவதற்கு திமுகவும், தேமுதிகவும் பந்தயக் குதிரைகள் போல களமிறங்கின. இந்தப் பந்தயத்தில் திடீரென காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கே தேமுதிகவினர் சென்று ஆதரவு கேட்டனர். காங்கிரஸும் தேமுதிகவை ஆதரிக்குமோ என்ற தோற்றத்தை உருவாக்குவது போல அக்கட்சியினர் கருத்துகள் வெளிப்பட்டன. இதனால் திமுக தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்தது.
இதனால் சுதாரித்துக் கொண்ட திமுக, விறுவிறுவென காய்களை நகர்த்தியது. பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணியை திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து ஆதரவு கோரினார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.
2 எம்.எல்.ஏக்களைக் கொண்ட மனித நேய மக்கள் கட்சியோ திமுகவுக்கே ஆதரவு என அறிவித்தது. இதற்கு பிரதிபலனாக அக்கட்சிக்கு லோக்சபா தேர்தலில் ஒரு எம்.பி. தொகுதியை ஒதுக்கவும் உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதே பார்முலாவின் அடிப்படையிலேயே புதிய தமிழகத்தையும் திமுக அணுகியது. இதற்கும் பலன் கிடைத்துள்ளது. புதிய தமிழகமும் தமது 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவை அளித்துள்ளது.
தற்போதைய நிலையில் பாமக, நிச்சயம் தேமுதிகவை ஆதரிக்காது. அது திமுகவை ஆதரிக்கும் நிலையில் திமுகவுக்கு 23 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பாமகவின் 3 எம்.எல்.ஏக்கள் மற்றும் மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சியின் 4 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் மொத்தம் 30 பேர் ஆதரவு திமுக வேட்பாளருக்குக் கிடைக்கும்.
தேமுதிகவுக்கு 22 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஒருவேளை காங்கிரஸ் கட்சி தேமுதிகவை ஆதரித்தாலும் கூட 27 என்ற எண்ணிக்கைதான் எட்ட முடியும்.
இந்த கூட்டல் கழித்தல் முடிவுகளின் அடிப்படையில் வெற்றி பெற முடியாதோ என்ற நிலையில் ஒருவேளை தேமுதிக திடீரென வேட்புமனுவை வாபஸ் பெறுமா?என்ற கேள்வியும் எழுந்திருந்தது. இருப்பினும் தேர்தல் களத்தில் குதித்தாயிற்று.. என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று வேட்புமனுவை வாபஸ் பெறாமல் களத்தை எதிர்கொள்கிறது தேமுதிக. இதனால் வரும் 27-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications