சென்னை முகப்பேரில் பரிதாபம்: லாரி மோதி6 ம் வகுப்பு மாணவி மரணம்...
சென்னை: சென்னை முகப்பேரில் லாரி மோதி 6ம் வகுப்பு பள்ளி மாணவி பலியான சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. பள்ளி செல்லும் நேரத்தில் கனரக வாகனங்களை நகருக்குள் அனுமதிக்கக் கூடாது என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் காசிராஜன். இவர் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் அபிராமி (11). இவர் முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
அபிராமி தனது சைக்கிளில் புதன்கிழமை காலை பள்ளிக்கு புறப்பட்டுள்ளார். அவர் மோகன்ராம் நகர் சாலையில் வந்துக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வேகமாக வந்த டேங்கர் லாரி அபிராமி மீது மோதிது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அபிராமியை மீட்ட பொதுமக்கள், மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அபிராமி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
விபத்தை ஏற்படுத்திய லாரி சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் ஒப்பந்த முறையில் கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக லாரியின் டிரைவர் திருவண்ணாமலையைச் சேர்ந்த ரவி (44) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள ரவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். உயிரிழந்த அபிராமியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பொதுமக்கள் போராட்டம்
மாணவியின் மரணத்தை அடுத்து முகப்பேர் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை, மாலையில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி கனரக வாகனங்களை இயக்கக்கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அங்கு பதற்றம் உருவானது. காவல்துறை அதிகாரிகள் சமாதானம் பேசியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications