நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜகவுடன் கூட்டணி சேரும் கட்சிகள்: பொன். ராதாகிருஷ்ணன் பேச்சு
குமரி: நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜகவுடன் கூட்டணி சேரும் கட்சிகள் குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் நாடாளுமன்ற தேர்தல் பணியை அக்கட்சியின் மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று துவங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
நாடாளுமன்ற தேர்தல் குறித்து பாஜக தொண்டர்களின் கருத்தை அறியும் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடந்தது. அடுத்ததாக தேர்தலுக்கு தயாராகும் பணிகள் துவங்கியுள்ளன. எந்தெந்த கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி சேரும் என்பது குறித்து இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும். அதன் பிறகு தேர்தல் பணிகள் மேலும் சூடுபிடிக்கும். இந்து மாணவ-மாணவியருக்கு கல்வி உதவித்தொகை கேட்டு பாஜக ஜூலை போராட்டத்தை 3 முறை நடத்தியும் கோரிக்கை நிறைவேற்றப்பட இல்லை.
தற்போது கடைசி முறையாக ஜூலை போராட்டம் நடக்கவிருக்கிறது. இது தவிர மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து வரும் 28ம் தேதி மாநில அளவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். குமரி மாவட்டத்தில் மட்டும் 13 இடங்களில் இந்த போராட்டம் நடக்கிறது என்றார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவின் வெற்றி, தோல்வியை பொறுத்து தான் நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சியின் நிலைப்பாடு தெரியும். தமிழகத்தில் ஆட்சி செய்த திராவிட கட்சிகள் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டன. அதனால் பாஜக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
இந்திய மற்றும் தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வெளிநாட்டு சிறைகளில் உள்ளனர். இலங்கை சிறையில் மட்டும் தமிழக மீனவர்கள் 50 பேர் உள்ளனர். அவர்களை மீட்க மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக மீனவர்களின் நலன் காக்க கச்சத்தீவை மீட்க வேண்டும். 1974ம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டபோது பாஜக மட்டும் அதற்கு எதிராக குரல் கொடுத்தது. தற்போதும் குரல் கொடுத்து வருகிறது. பாஜக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் பிரிந்து சென்றதால் அதற்கு தான் பாதிப்பே தவிர பாஜகவுக்கு ஒரு இழப்பும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications