ராஜ்யசபா தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: ராமதாஸ் அறிவிப்பு-திகிலில் திமுக!

ராஜ்யசபா தேர்தலில் பா.ம.க.வின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து முடிவெடுக்க சென்னையில் இன்று அக்கட்சியின் செயற்குழுக் கூடியது.
இந்த கூட்டத்தில் ராஜ்யசபா தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான வியாழக்கிழமை மாலை 3 மணி வரை யாரும் வேட்புமனுவை திரும்பப் பெறவில்லை. இதனால், 6 இடங்களுக்கு ஏழு பேர் போட்டியிடுவதால் தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
அதிமுகவைச் சேர்ந்த நான்கு வேட்பாளர்கள், அதிமுக ஆதரிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.ராஜா ஆகியோரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. எனினும் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் ஆகியோர் இடையே 6-ஆவது இடத்துக்கு நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.
வெற்றிக் கோட்டை எட்டுவதற்கு தேமுதிக, திமுக ஆகிய கட்சிகளுக்கு 5 எம்.எல்.ஏ.க்களை கொண்ட காங்கிரஸ், 3 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள பாமக ஆகியோரின் ஆதரவு மிகவும் அவசியம். இந்த இரு கட்சிகளும் தங்களுக்கான ஆதரவு யாருக்கு என்பதை இன்று காலை வரை அறிவிக்காமல் இருந்தன.
பாமகவிடம் ஆதரவு கேட்டு பேச்சுவார்த்தை நடத்தினார் ஸ்டாலின். துரைமுருகன் மூலமும் பேச்சு நடத்தப்பட்டது.
ஆனால் இனி திராவிட கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று நிலைப்பாட்டினை எடுத்துள்ள பாமக ராஜ்யசபா தேர்தலில் ஆதரவு தரப் போவதில்லை என அறிவித்துள்ளது. இதனால் கனிமொழியின் வெற்றி வாய்ப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியிடம் திமுக, தேமுதிக ஆகிய இருவருமே ஆதரவு கேட்டுள்ளனர். எனவே காங்கிரஸ் யாரை ஆதரிக்கிறார்கள் என்ற அறிவிப்பு வெளியானால் 6-ஆவது இடத்தைப் பெறும் எதிர்க்கட்சி எது என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிடும்.












Click it and Unblock the Notifications