துபாயில் குரான் பூங்கா: 2014ல் மக்கள் பார்க்கலாம்
துபாய்: ஒளி மற்றும் ஒலி விளக்கங்களுடன் குரானில் உள்ள காட்சிகளை விவரிக்கும் வகையில் துபாயில் பூங்கா அமைக்கும் திட்டம் விரைவில் செயல் வடிவம் பெறுகிறது. இதற்கான தீவிர முயற்சிகளில் துபாய் அரசு இறங்கியுள்ளதாம்.
துபாய் அரசு, குரானில் உள்ள காட்சிகளை பொதுமக்கள் அறியும் வகையில் பூங்கா ஒன்றை அமைக்கத் திட்டமிட்டது. அதற்கான முயற்சியில் இறங்கியுள்ள அரசு, குரான் பூங்கா 2014ல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படும் என அறிவித்துள்ளது.
அதிக அளவில் முஸ்லீம் மக்களையும், உலக நாடுகளில் உள்ள சுற்றுலாப் பயணிகளையும் கவருவதும் துபாய் அரசின் நோக்கம் என தெரிய வந்துள்ளது.

இயற்கை தாவரங்கள்...
இந்த ‘குரான் பூங்கா திட்டம்' துபாய் அரசின் நீண்ட நாள் லட்சியம் ஆகும். இதற்காக 7.3 மில்லியன் டாலர் திட்ட மதிப்பீடு கணக்கிடப்பட்டுள்ளது. இந்த குரான் பூங்காவில் ஏராளமான தாவரங்கள் வளர்க்கத் திட்டமிட்டுள்ள அரசு, அவை அனைத்தும் குரானில் உள்ள தாவரங்களாக இருக்க வேண்டும் என முனைப்புக் காட்டுகிறதாம்.

குகை காட்சிகள்...
குரான் தாவரத் தோட்டத்தின் நடுவே, குளிர்சாதன வசதிகளுடன் கூடிய குகைப்பாதை ஒன்று அமைக்கப்பட்டு, அதன் இருபுறங்களிலும் குரானின் காட்சிகள் ஒளி, ஒலி விளக்கங்களுடன் சித்தரிக்கப்பட இருக்கிறது.

2014ல் பொதுமக்கள் பார்க்கலாம்...
குரான் பூங்கா திட்ட நிர்வாக இயக்குனர் முகமது நூர் மஷ்ரூம் கூறுகையில், 'இந்த பூங்கா வரும் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும்' என்றார்.

சுற்றுலாப் பயணிகளைக் கவர...
மேற்கத்திய நாடுகள் ஸ்டைலில் சுற்றுலா முறைகளைப் பின்பற்றி இந்த பூங்கா அமைக்கப்பட இருக்கிறது.

கண்டனங்களும் அதிகம்...
சமீபத்தில் சவூதி அரேபிய மத குரு ஒருவர், அவர்கள் நாட்டு பெண்கள் துபாய்க்கு செல்வது பாவமான செயல் என கண்டனக் குரல் எழுப்பி, பின்னர் அதற்கு அதிகமான ஆட்சேபங்கள் எழுந்ததால் அதனை திரும்பப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications