ராணுவ அமைச்சர் பதவி விலக வேண்டும்: மதிமுக மாநில இளைஞர் அணி வலியுறுத்தல்
சென்னை: இலங்கை ராணுவத்தினரை, தமிழகத்தில் அனுமதித்திருப்பது ராணுவ அமைச்சரின் கண்ணியத்தையும், நேர்மையையும் கேள்விக்குறியதாக்கியுள்ளது. தமிழக மக்களுக்கு துரோகம் செய்த பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி உடனே பதவி விலக வேண்டும் என மதிமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதிமுகவின் இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம், 22.06.2013 அன்று, தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெற்றது. கழக இளைஞர் அணிச் செயலாளர், பொறியாளர் வே.ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு பேசினார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

லட்சம் புதிய இளைஞர்கள் சேர்ப்பு
இளைஞர் அணியை மேலும் வலிமைப்படுத்திட, அடுத்த ஆறுமாத காலத்திற்குள் ஒரு இலட்சம் புதிய இளைஞர்களை உறுப்பினர்களாகச் சேர்க்க தீவிர பணியாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
புதிய இளைஞர்கள் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டங்கள் நவம்பர் மாதம் 8 ஆம் தேதி முதல் மாவட்ட வாரியாக நடைபெறும்.

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு
விருதுநகர் நகரில் பேரறிஞர் அண்ணா பிறந்த திருநாளாம் செப்டம்பர் 15 இல் நடைபெறும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா - கழக திறந்த வெளி மாநாட்டில் இளைஞர் அணியினர் 10,000 பேர் சீருடையில் பங்கேற்பது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

ராணுவ அமைச்சர் பதவி விலக வேண்டும்
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இலங்கை ராணுவத்தினருக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்க மாட்டோம் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி தமிழகத்தில் உறுதிகூறிய அதே நாளில், பயிற்சிக்காக இலங்கை ராணுவத்தினரை, தமிழகத்தில் அனுமதித்திருப்பது இராணுவ அமைச்சரின் கண்ணியத்தையும், நேர்மையையும் கேள்விக்குரியாக்கி உள்ளது. இது இந்தியாவிற்கு அவமானச் செயலாகும்.
தமிழக மக்களுக்கு துரோகம் செய்த இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோனி அப்பதவியை வகிக்க தகுதியற்றவராகிறார். அவர் உடனே பதவி விலக வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி
லட்சக்கணக்கான தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த, இலங்கை ராணுவக் கொலைகாரர்களுக்கு தமிழ் நாட்டில் இருந்து மட்டுமல்ல, இந்தியாவில் எந்த இடத்திலும் பயிற்சி அளிக்கக்கூடாது என்றும், அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றும், இனி எப்போதும் இந்தியாவில் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கக்கூடாது எனவும் இக்கூட்டம் இந்திய அரசை வலியுறுத்துகிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்து!
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவையும் மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என இக்கூட்டம் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது.

உயர்கல்வியில் சீர்திருத்தம்
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களின் சேர்க்கைக்கு ஒவ்வொரு பல்கலைக் கழகத்திலும் அனைத்துக் கல்லூரிகளையும் இணைத்து ஒற்றைச் சாளர முறையைப் பின்பற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் கல்விக் கட்டணத்தை வரைமுறைப்படுத்த வேண்டும் எனவும்;அரசு உதவிபெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆயிரக்கணக்கான பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.

பாரம்பரிய மருத்துவம்
சித்தா, ஆயுர்வேதா உள்ளடக்கிய இந்திய மருத்துவத்துறை வளர்ச்சிக்காக இந்தியப் பாரம்பரிய மருத்துவப் பல்கலைக் கழகம் கன்னியாகுமரியில் அமைக்கப்படும் என்று 2010 ஆம் ஆண்டிலேயே தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை இத்திட்டம் நிறைவேறவில்லை. தற்போதைய அரசு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே 1.5 கோடியை தற்காலிக நிதியாக ஒதுக்கியும், அதனைப் பயன்படுத்தாமல் இத்திட்டம் இன்னமும் கிடப்பில் உள்ளது. உடனடியாக இப்பல்கலைக் கழகம் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

விளையாட்டுத் துறையை மேம்படுத்திடுக!
இளைஞர்களை உடல் மற்றும் மன ஆரோக்கியத்தோடும், சகோதரத்துவ எண்ணத்தோடும் வைத்திருக்க உதவுவது விளையாட்டு ஆகும். ஆனால், இன்று விளையாட்டு மைதானமே இல்லாத பள்ளிகளில்தான் மாணவர்கள் படிக்கின்ற நிலை உள்ளது.
இந்நிலை மாறிட அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் உடற்பயிற்சி கூடங்களும், விளையாட்டு மைதானங்களும் ஏற்படுத்தப்பட வேண்டும. சிறந்த விளையாட்டு பயிற்சியாளர்களைஅதிக அளவில் நியமனம் செய்ய வேண்டும். இதற்கு தனிக்கவனம் செலுத்தி, விளையாட்டுத் துறையை ஊக்குவிக்கும் வண்ணம் அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் இக்கூட்டம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

தமிழகத்தின் ரயில்வே திட்டங்கள்
தமிழகத்தின் பல்வேறு இரயில்வே வளர்ச்சித் திட்டங்களும், இரயில் பாதை அகலப்படுத்தும் பணிகளும் மிகவும் மெத்தனமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதனால், தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது. இப்பணிகளை விரைவுபடுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
போன்ற 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications