இலங்கை கொடியுடன் சீன கப்பல்களுக்கு மீன்பிடிக்க அனுமதி: கேரள மீனவ அமைப்புகள் எதிர்ப்பு
கொழும்பு: இந்தியா - இலங்கை இடையிலான கடற்பரப்பில் இலங்கை தேசியக் கொடியுடன் சீனா கப்பல்களுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கேரள மீனவ அமைப்பினர் ஆழ்கடலில் உள்ள மீன்வளங்கள் அழிந்துவிடும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.
சீன நிறுவனம் இலங்கை முதலீட்டுச் சபையுடன் ஏற்படுத்தியுள்ள உடன்பாட்டின் படி சிங்கள தேசியக் கொடியுடன் சீன கப்பல் ஆழ்கடலில் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டது.
இதன்படி இங்கு பிடிக்கப்படும் மீன்களில் 90 சதவீதம் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும். எஞ்சிய 10 சதவீத மீன்கள், கிலோ ஒன்று ஒரு டாலர் வீதம், இலங்கை கடற்தொழில் கூட்டுஸ்தாபனத்துக்கு வழங்கப்படும் என்று இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்த மீன்பிடிக் கப்பல்கள், புதிதாக திறக்கப்பட்ட டிகோவிற்ற (Dickowita) மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து செயற்படும். இதற்காக சுமார் 150 அடி நீளம் கொண்ட நான்கு மீன்பிடிக் கப்பல்களை முதலில் பயன்படுத்த சீன நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பின்னர், மேலும் 16 மீன்பிடிக் கப்பல்கள் பயன்படுத்தப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
கேரளா மீனவ அமைப்பு
இதற்கு கேரள மாநில மீன்வள அமைப்புகளும், படகு உரிமையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
'ஏற்கனவே ஆழ்கடலில் உள்ள மீன்வளங்கள் அழிந்து விட்டது. இதனால் இந்தியாவில் மீன் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலுள்ள பொதுவான கடல் பகுதியில் சீன கப்பல்கள் மீன் பிடித்து வருவதால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளனர்.
4000 சதுர கி.மீ. பரப்பளவுள்ள இந்த கடற்பகுதியில் உள்ள மீன்வளங்கள் முழுவதையும், 150 அடி நீளமுள்ள சீனக்கப்பல்கள் அழித்து விடும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்












Click it and Unblock the Notifications