நிரம்பி வழியும் பில்லூர் அணை... பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பி வழிவதால் அணை திறக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து கரையோர கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள நீர்பிடிப்புப் பகுதிகளில், கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, 100 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் 98 புள்ளி 5 அடியை தாண்டியது.
இதனையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி, நான்கு மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர்வரத்து 21 ஆயிரத்து 300 கனஅடியாக உள்ள நிலையில், தற்போது அதேஅளவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அதன் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் கரையோரப் பகுதிகளில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
முணாறில் நிலச்சரிவு
கேரள மாநிலம் மூணாறில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கேரளாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை கொட்டி வரும் நிலையில், சுற்றுலா நகரமான மூணாறில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு மூணாறு காலனி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தாயும், மகனும் உயிரிழந்தனர்.
தொடர்ந்து பெய்து வரும், பலத்த மழை காரணமாக இன்று அதிகாலை புதிய மூணாறு பகுதியில் உள்ள உணவகம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய ஒருவர் உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர்.
கேரள மாநில எல்லையோரமான கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில், தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கூடலூர் பகுதிகளில் உள்ள பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications