இணைந்த 'கை'களான திமுக-காங்கிரஸ்! 'கை' விடப்பட்ட தேமுதிக!!
சென்னை: தமிழக ராஜ்யசபா தேர்தல் தொடக்கம் முதலே பல அதிரடி திருப்பங்களை அரங்கேற்றி வந்ததுடன் லோக்சபா தேர்தல் கூட்டணிக்கான முன்னோட்ட களமாக இருந்தது.
அ.தி.மு.கவின் சார்பில் மைத்ரேயன், ரத்னவேலு, கே.ஆர்.அர்ஜூனன், டாக்டர் லட்சுமணன் மற்றும் அதிமுக ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்ட்டின் டி.ராஜா ஆகியோரும் 6வது எம்.பி. இடத்துக்கு தி.மு.க. சார்பில் கனிமொழி மற்றும் தே.மு.தி.க. வேட்பாளராக இளங்கோவன் ஆகியோர் ராஜ்யசபை தேர்தலில் போட்டியிடுகின்றனர். 6 பேரை தேர்வு செய்வதற்கு 7 பேர் போட்டியிடுவதால் வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது.

அதிமுக அணியின் 5 வேட்பாளர்களின் வெற்றி உறுதியாகிவிட்டது. 6வது எம்.பி. இடத்தை யார் கைப்பற்றப் போவது என்ற சிக்கலான நிலையில் திமுகவுக்கு காங்கிரஸ் கை கொடுத்திருக்கிறது. இதனால் திமுக வேட்பாளர் கனிமொழியின் வெற்றி உறுதியாகிவிட்டது. இது ராஜ்யசபா தேர்தலுடன் முடிந்து போய்விட்ட ஒன்றாக கருத முடியாது!
ஏற்கெனவே ஸ்பெக்ட்ரம் விவகாரம், ஈழத் தமிழர் விவகாரம் என பல பிரச்சனைகளில் காங்கிரஸுடன் திமுகவுக்கு கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதன் உச்சமாகத்தான் மத்திய அரசில் இருந்து மட்டுமல்ல.. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தே திமுக வெளியேறியது. தற்போது மீண்டும் திமுகவே காங்கிரஸ் கட்சியின் கதவைத் தட்ட வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டது. அதுவும் தேமுதிகவுடன் மல்லுக் கட்டிக் கொண்டு காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற போராட வேண்டிய ஒரு அவல நிலைக்கு திமுக தள்ளப்பட்டது.
இப்படிப்பட்ட நிலையில்தான் காங்கிரஸ் கட்சி, திமுகவை ஆதரிப்பதாக அறிவித்திருகிறது. இதன் மூலம் திமுக- காங்கிரஸ் இடையே உறவு மீண்டும் ஒட்டப்பட்டிருக்கிறது. இப்படி காங்கிரஸ்- திமுக இரண்டும் 'இணைந்த கைகளாக' உருவெடுப்பதிருப்பதன் மூலம் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு சிக்கல் வந்தால் காப்பாற்ற வேண்டிய நிலையில் திமுக இருக்கிறது.
மேலும் இப்போது இணைந்திருக்கும் இந்த உறவு அப்படியே லோக்சபா தேர்தல் வரை நீடிக்கவும் வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது. இதன் மூலம் லோக்சபா தேர்தலில் திமுக, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகியவை திமுக தலைமையில் அணி அமைக்கக் கூடிய நிலை உருவாகி இருக்கிறது.
அதிமுக அணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி இணைவது உறுதியாகி இருக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சியோ எந்த அணியிலும் இணையப் போவது இல்லை என அறிவித்திருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் திமுக அணியில் இணையுமா? அதிமுக அணிக்கு தாவுமா என்பது ஊசலாட்ட நிலையில் இருக்கிறது.
இப்படி அனைத்து கட்சிகளும் ஆளுக்கு ஒரு அணியில் இணைய இருக்கும் அல்லது இணைந்து இருக்கும் நிலையில் தேமுதிக கை கழுவி விடப்பட்ட கட்சியாக தனியே தன்னந்தனியே நின்று கொண்டிருக்கிறது என்பதுதான் பரிதாபத்துக்குரிய காட்சி!!












Click it and Unblock the Notifications