தேர்தல் வழக்கு விசாரணை: ஒன்றரை மணி நேரம் பதிலளித்த மு.க.அழகிரி!

மதுரை லோக்சபா தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார் மு.க. அழகிரி. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போதே மோகன் காலமானார். அவருக்குப் பதில் மார்க்சிஸ் கட்சியைச் சேர்ந்த லாசர் இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்துவதாக மனுத்தாக்கல் செய்தார். இதை உயர்நீதிமன்றம் ஏற்றது. இந்த வழக்கை நீதிபதி தனபாலன் விசாரித்து வருகிறார்.
இந்த வழக்கில் அழகிரி சாட்சியமளித்தார். அவரிடம் நேற்று லாசரின் வழக்கறிஞர் கிருஷ்ணன் குறுக்கு விசாரணை செய்தார். அப்போது கிருஷ்ணனின் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த அழகிரி, வழக்கைத் தொடுத்தது லாசர். அவர் .எம்.எல்.ஏ எனத் தெரியும். ஆனால் எந்த கட்சி எனத் தெரியாது என்று கிண்டலாக கூறினார்.
இதேபோல் என்னுடைய தலைமைத் தேர்தல் ஏஜெண்ட் என்பவரின் பணியே என்னை வெற்றி பெறச் செய்வதுதான் என்று சிரித்துக் கொண்டே கூறினார். மேலும் என்னுடைய ஏஜெண்ட் கையைக் குவித்து வாக்கு கேளுங்கள் என்பார். நானும் இதேபோல் கையைக் குவித்து வாக்கு கேட்பேன் என்று செய்து காட்ட வழக்கறிஞர்கள் சிரித்துக் கொண்டே இருந்தனர்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த போது, அனைத்து பத்திரிகைகளையும் படிப்பதில்லை. முரசொலி மற்றும் சில பத்திரிகைகளை படிப்பேன். தேர்தல் ஆணைய உத்தரவுப்படி மதுரை போலீஸ் கமிஷனரை மாற்றியிருக்கலாம். அதற்கு நான் என்ன செய்ய முடியும் என்றார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் ஜூலை 1-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. மு.க. அழகிரியின் தரப்பில் வழக்கறிஞர்கள் டி.ஆர். ராஜகோபால், சண்முகசுந்தரம் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.












Click it and Unblock the Notifications