மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்த 201 மாணவர்களுக்கு லேப்டாப்: ஜெ. வாழ்த்து
சென்னை: 2012-2013ஆம் கல்வியாண்டில்,10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற 201 மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா மடிக்கணினிகளை வழங்கி வாழ்த்தினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று, மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ- மாணவியர்களுக்கு தமிழக அரசு ரொக்க பரிசுகள் வழங்கி பாராட்டுவதோடு, அவர்களின் மேற்படிப்பு செலவினையும் அரசே ஏற்றுக் கொள்கிறது.
2012-2013ஆம் கல்வியாண்டில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற 9 மாணவிகள், இரண்டாம் இடத்தைப் பெற்ற 50 மாணவ மாணவிகள் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்ற 129 மாணவ மாணவிகள், என மொத்தம் 188 மாணவ மாணவிகளும்,
12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற 2 மாணவர்கள், இரண்டாம் இடத்தைப் பெற்ற 2 பேர் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்ற 9 மாணவ மாணவிகள் என மொத்தம், 201 மாணவ மாணவிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் மடிக்கணினிகளை வழங்கினார்.
பின்னர் மாணவர்களிடையே பேசிய ஜெயலலிதா, உங்கள் சாதனைகளைக் கண்டு உங்கள் பெற்றோர்கள் பெருமைப்படுவதைப் போல, தமிழக அரசும் குறிப்பாக நானும் உங்கள் சாதனைக்காக மிகவும் பெருமிதம் அடைகிறேன்; உங்கள் அனைவருக்கும் நல்ல ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்" என்று வாழ்த்தினார்.
முதல்வரிடம் இருந்து பாராட்டோடு, மடிக்கணினிகளையும் பெற்றுக் கொண்ட மாணவ, மாணவிகள் தங்களைப் பாராட்டி மடிக்கணினிகளை வழங்கி ஊக்குவித்தமைக்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.