4வதும் பொண்ணா?: பிறந்த குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்துக் கொன்ற தந்தை கைது
தர்மபுரி: பென்னாகரம் அருகே பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள எரங்காடு காட்டு கொல்லையைச் சேர்ந்தவர் மாதேஷ். அவர் பெங்களூரில் கூலி வேலை செய்து வருகிறார். அவருக்கும் மாலா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. அவர்களுக்கு சந்தியா (8), சாதனா (7), காவியா (2) ஆகிய 3 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான மாலா கடந்த 2ம் தேதி 4வதாக பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்த முறை ஆண் குழந்தை பிறக்கும் என்று நம்பிய மாதேஷ் ஏமாற்றம் அடைந்தார். இதையடுத்து அவர் மாலாவிடம் தகராறு செய்தார். பின்னர் மாலாவிடம் கோபித்துக் கொண்டு பெங்களூருக்கு கிளம்பிவிட்டார்.
பின்னர் ஊர் திரும்பிய அவர் 4வதாக பிறந்த குழந்தை திடீர் என்று இறந்துவிட்டது என்று உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். போலீசாருக்கு தெரிவிக்காமலேயே குழந்தையை புதைத்துவிட்டனர். இந்நிலையில் அந்த குழந்தை இறந்ததில் மர்மம் இருப்பதாக பென்னாகரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் மாதேஷை பிடித்து விசாரித்தனர். அப்போது குழந்தையை கொன்றதை அவர் ஒப்புக் கொண்டார். ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் 4வதும் பெண்ணாக பிறந்ததால் அதை கள்ளிப்பால் கொடுத்து கொன்றதாக தெரிவித்தார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மாதேஷை கைது செய்தனர். பின்னர் குழந்தையின் உடலை தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுத்து பிரதே பரிசேதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications