பவானிசாகர், அமராவதி, பெரியாறு அணைகள் திறப்பு: ஜெயலலிதா
சென்னை: விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பெரியாறு, அமராவதி, பவானிசாகர் அணைகள் வரும் நாளை திறக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது:
தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளுக்கு முதல் போக சாகுபடிக்காக பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடம் இருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
அவர்களின் வேண்டுகோளினை ஏற்று, பெரியாறு அணையிலிருந்து 28.6.2013 முதல் தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளேன்.
இதனால், தேனி மாவட்டத்தில் உள்ள தேனி, உத்தமபாளையம் மற்றும் போடிநாயக்கனூர் வட்டங்களிலுள்ள 14,707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
அமாரவதி அணை
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 பழைய பாசன வாய்க்கால்களின் மூலம் குறுவை பாசனத்திற்காக 28.6.2013 முதல் தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளேன். இதனால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 7,520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
பவானி சாகர் அணை
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி கால்வாய்களில் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேண்டுகோள் விடுத்த விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி கால்வாய்களின் கீழ் உள்ள நிலங்களுக்கு முதல் போக சாகுபடிக்காக 28.6.2013 முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன். இதனால், ஈரோடு மாவட்டம், அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி கால்வாய்களின் கீழ் உள்ள 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்












Click it and Unblock the Notifications