ஓட்டுச்சீட்டை எல்லோருக்கும் காட்டிய தேமுதிக எம்எல்ஏ ஓட்டு செல்லுமா?: தேர்தல் கமிஷன் விசாரணை
டெல்லி: ராஜ்யசபா தேர்தலில் வாக்களித்த தேமுதிக எம்எல்ஏ தனது ஓட்டுச் சீட்டை அனைவருக்கும் தெரியும்படி காட்டியதால் அவரது வாக்கு செல்லுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழகத்தில் இருந்து 6 ராஜ்யசபா எம்பிக்களைத் தேர்வு செய்ய நேற்று தேர்தல் நடந்தது.
எம்.எல்.ஏக்கள் ஓட்டுப்போடும் முன் யாருக்கு போடுகிறோம் என்பதை தனது கட்சியின் ஏஜெண்டிடம் மட்டும் காண்பிக்க வேண்டும்.
ஆனால், திருத்தணி தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ அருண் சுப்பிரமணியன் தனது ஓட்டுச்சீட்டை தே.மு.தி.க. தேர்தல் ஏஜெண்டிடம் அருகில் போய் காட்டாமல் தூரத்தில் நின்று எல்லோருக்கும் தெரியும்படி காட்டினார்.
இதையடுத்து தேர்தல் அதிகாரி ஜமாலுதீன், ஓட்டுச்சீட்டை எல்லோரிடமும் காண்பிக்க கூடாது. ஏஜெண்டிடம் அருகில் சென்று தான் காட்ட வேண்டும், எல்லோருக்கும் தெரியும்படி காட்டினால் ஓட்டை ரத்து செய்ய நேரிடும் என்று எச்சரித்தார்.
இதைத் தொடர்ந்து அருண் சுப்பிரமணியம் தனது கட்சி ஏஜெண்டிடம் நெருங்கிச் சென்று காட்டிவிட்டு ஓட்டுப்போட்டார்.
இந் நிலையில் இந்த விவகாரம் குறித்து ராஜ்யசபா தேர்தல் பார்வையாளரிடம் இருந்தும் தேர்தல் அதிகாரியிடம் இருந்தும் அறிக்கை வந்ததும் அதன் மீது ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனால் அவரது ஓட்டு செல்லாது என அறிவிக்கப்படும் அபாயமும் நிலவுகிறது.
ஏற்கனவே 7 அதிருப்தி எம்எல்ஏக்கள் அதிமுகவுக்கு ஓட்டுபோட்டுவிட்ட நிலையில், தேமுதிகவில் நீடிக்கும் ஒரு எம்எல்ஏவின் ஓட்டும் கேள்விக்குறியாகியுள்ளது.
தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தோற்றுவிட்ட நிலையில், இந்த ஓட்டு செல்லாத ஓட்டு ஆனாலும் கூட தேர்தல் முடிவில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.












Click it and Unblock the Notifications