மோசமான வானிலை: கொடநாட்டில் தரையிறங்க முடியாமல் தவித்த ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர்!

இதையடுத்து அந்த ஹெலிகாப்டர்கள் கோவைக்குத் திரும்பியது.
கொடநாட்டில் ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று கொடநாடு புறப்பட்டு
ராஜ்யசபா தேர்தல் நேற்று முடிந்தது. அதில் போட்டியிட்ட அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 5 பேர் வெற்றி பெற்றுவிட்டனர். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா இன்று காலை சென்னை போயஸ் கார்டனில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட்டுக்கு கிளம்பிச் சென்றார்.
போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து கார் மூலம் சென்னை விமான நிலையம் வந்த அவரை அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.
சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, அரசு உயர் அதிகாரிகள், அதிமுக முன்னணி நிர்வாகிகள், மாநகாட்சி கவுன்சிலர்கள், பல்லாவரம் தன்சிங், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் வழியனுப்பி வைத்தனர்.
பின்னர் தனி விமானம் மூலம் காலை 10:25 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து கோவை புறப்பட்டுச் சென்றார் ஜெயலலிதா.
10:55 மணிக்கு கோவை வந்த ஜெயலலிதாவை அமைச்சர்கள் தாமோதரன், தோப்பு வெங்கடாசலம், கோவை கலெக்டர் கருணாகரன், மேயர் செ.ம.வேலுச்சாமி மற்றும் நிர்வாகிகள் மலர்க் கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் 11:25 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கொடநாடுக்கு ஜெயலலிதா புறப்பட்டுச் சென்றார்.
ஆனால், கொடநாடு பகுதியில் மேகமூட்டம் அதிகம் இருந்ததாலும், வானிலை சரியில்லாததாலும் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியவில்லை. இதையடுத்து மீண்டும் கோவைக்கே திரும்பியது ஹெலிகாப்டர்.
அங்கிருந்து ஜெயலலிதா மீண்டும் கார் மூலம் கொடநாடு சென்றார். அங்கு முதல்வருக்கு அதிகாரிகள், மற்றும் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நீலகிரி மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். முதல்வரை வரவேற்கும் விதமாக மயிலாட்டம், ஒயிலாட்டம், மானாட்டம் உள்ளிட்ட ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
கோவை மேற்கு மண்டல காவல் தலைவர் டேவிட்சன் தேவஆசீர்வாதம், துணைத்தலைவர் கணேசமூர்த்தி, தருமபுரி காவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
ஜெயலலிதா சில வாரங்கள் கொடநாட்டில் தங்கியபடியே அரசு பணிகளை கவனிப்பார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர் எப்பொழுது சென்னை திரும்புவார் என்று தெரிவிக்கப்படவில்லை.
கடைசியாக அவர் கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி கொடநாட்டுக்கு சென்றார்.












Click it and Unblock the Notifications