சென்னையை குளிர்வித்த திடீர் மழை… வடமாவட்டங்களில் இன்றும் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் கடந்த 1ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை சில மாவட்டங்களில் பெய்துவருகிறது. நெல்லை, குமரி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.
நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேர நிலவரப்படி சின்னக்கல்லார் 6 செ.மீ., சேலம் 5 செ.மீ., தேவலா, வால்பாறை, கோபிச்செட்டிப்பாளையம், ஆத்தூர் தலா 4 செ.மீ., பொள்ளாச்சி, மங்களபுரம், ஆர்.எஸ்.மங்கலம், பெரியார் தலா 3 செ.மீ., செங்கோட்டை, ஓமலூர், குமரப்பாளையம், பவானி, அஞ்சட்டி தலா 2 செ.மீ., திருப்பத்தூர், சங்ககிரி, வாழப்பாடி தலா 1 செ.மீ.மழை பதிவாகி உள்ளது.
சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் மழை ஏமாற்றி வந்தது. கடந்த சிலநாட்களாக பகலிலும், இரவிலும் வெப்பத்தில் சிக்கித் தவித்த சென்னை மக்களை குளிர்விக்கும் விதமாக நேற்று மாலையில் திடீர் என்று மேகம் திரண்டு மழைபெய்தது.
எழும்பூர், மயிலாப்பூர், வேப்பேரி, புரசைவாக்கம், அடையாறு, வில்லிவாக்கம், கொரட்டூர், தாம்பரம், ராஜகீழ்பாக்கம், மாடம்பாக்கம் உள்பட பல்வேறு இடங்களில் நேற்று மாலை மழை பெய்தது. இதனால் இரவில் வெப்பம் தணிந்து குளிர்காற்று வீசியது.
இன்றும் மழை
இன்று தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும் என்றும் மற்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் தீவிரம்அடைந்துள்ளது. இருப்பினும் கேளரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துவருகிறது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications