கேதார்நாத் வெள்ளத்தில் தொலைந்த மனைவி: 13 நாட்கள் தேடிவிட்டு தனியே விழுப்புரம் திரும்பிய கணவர்…

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சார் தாம் யாத்திரை சென்ற தமிழகம், புதுச்சேரி பக்தர்கள் அங்கு மழைவெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். விழுப்புரத்தில் இருந்து 37 பேர் யாத்திரை சென்றிருந்தனர். இதில் கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த பாலகுருநாதன் என்ற மளிகை வியாபாரி தனது மனைவி லட்சுமியுடன் கேதார்நாத் பயணம் சென்ற போது மழை வெள்ளத்தில் தனது மனைவியை பிரிந்து விட்டார். கடந்த 13 நாட்களாக தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியாததால் பாலகுருநாதன் டெல்லியில் இருந்து நேற்று இரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: விழுப்புரத்தில் இருந்து கடந்த 11ம் தேதி 37 பேர் யாத்திரை சென்றோம். 13ம் தேதி அரித்துவார் சென்று விட்டு புத்தகாசி சென்றோம். பின்னர் சித்தாப்பூர் வழியாக கேதார்நாத் கோவிலுக்கு சென்றோம். அங்கு சாமி தரிசானம் செய்தோம். முதலில் ஹெலிகாப்டர் மூலம் செல்வதாக இருந்தது. ஆனால் வானிலை சரியாக இல்லாததால் டோலி மூலம் மலை மேல் ஏறினோம். கேதார்நாத்தில் இருந்து மலையில் கீழே இறங்கினோம்
கண்முன்னே வெள்ளம்
7 கிலோ மீட்டர் தூரம் டோலி மூலம் வந்தபோது போது ஒருவர் வந்து, வெள்ளம் ஏற்பட்டு பாதைகள் உடைந்து தண்ணீர் நிறைய பேரை அடித்துச் செல்வதாக கூறினார். இதனால், டோலிகள் எங்களை வேகமாக மலை மேல் தூக்கிச் சென்றார்கள். அப்போது நாங்கள் திரும்பி பார்த்தபோது, நாங்கள் வந்த வளைவுகளில் 3 வளைவுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை கண்டு பயந்து போனோம். அப்போது தான் என் மனைவி லட்சுமி உள்பட சிலரை காணவில்லை என்பது தெரியவந்தது.
எங்களுடன் வந்த 37 பேரில் 2 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியாகி விட்டனர். 10 பேர் மாயமாகிவிட்டனர். என்னுடன் வந்தவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் வந்து விட்டனர். நான், எனது மனைவி கிடைக்காமல் வரமாட்டேன் என கூறி அங்கேயே இருந்தேன். பல இடங்களில் தேடியும் எனது மனைவி கிடைக்கவில்லை. எப்படியும் மனைவியை கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கேயே இருந்தேன். ஆனால் உத்தரகாண்ட் வந்த என் தம்பியும், மகனும் என்னை அழைத்து வந்துவிட்டனர்.
காணாமல் போன எனது மனைவி லட்சுமி எப்படியும் என்னுடன் வந்து சேருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று சோகத்திலும் நம்பிக்கையோடு கூறினார் பாலகுருநாதன்.
10 பேரின் நிலை
உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கிய பக்தர்களை பாதுகாப்பாக திருப்பி அழைத்து வர ஒரு குழுவை தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுப்பி வைத்தார். விமானம் முலம் தமிழகத்தை சேர்ந்த 383 பக்தர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு சொந்த ஊர்களுக்கு அரசு பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். விழுப்புரம் பக்தர்கள் 10 பேரின் நிலை என்னவென்று தெரியாத காரணத்தினால் அவர்களின் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications