மதுரை வந்தது விமானி பிரவீண் உடல்... அரசு மரியாதையுடன் தகனம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கடந்த 25ஆம் தேதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் பலியானார்கள். அதில் மதுரையைச் சேர்ந்த இளம் விமானி பிரவீணும் மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று (29.06.13) காலை விமானப்படைக்கு சொந்தமான சிறப்பு விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்பட்டது.
அவரது உடலைப் பார்த்து தாய் மஞ்சுளா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் சத்தியசாய் நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.
மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர், மேயர் ராஜன்செல்லப்பா, எம்.எல்.ஏ.க்கள் அண்ணாத்துரை, கதிரவன் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பிரவீண் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் செல்லூர் ராஜு, முதல் அமைச்சர் ஜெயலலிதா அனுப்பிய இரங்கல் செய்தியையும், முதல்வர் சார்பில் ரூ .10 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார்.
பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், சீருடைப்பணியாளர்கள், சமூக சேவர்கள் என பலரும் அவருக்கு வீர வணக்கம் செலுத்தி இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டனர். இறுதியாக அரசு மரியாதையுடன் பிரவீணின் உடல் அனுப்பானடி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications