பெட்ரோல் விலை உயர்வு... மத்திய அரசு மீது கோபப்பட மறுக்கும் கருணாநிதி!

பெட்ரோல் விலை உயர்வுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டன ம் தெரிவித்திருக்கும் நிலையில் திமுக தலைவர் கருணாநிதியோ "விலை உயர்வை தவிர்க்க மாற்று வழி" காண வேண்டும் என்று அட்வைஸ் செய்திருக்கிறார்.
இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பெட்ரோல் விலை இன்றைய தினம் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 2.32 என்ற அளவிற்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் டீசல் விலையும் மீண்டும் உயர்த்தப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படி பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் அதன் தொடர்ச்சியாக பல்வேறு பொருள்களின் விலைகளும் உயர்ந்து மக்கள் தாங்கொணா தொல்லையில் சிக்குண்டிருக்கும் நிலையில், இயற்கை எரிவாயு விலையையும் சுமார் இரண்டு மடங்கு உயர்த்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக செய்தி வந்துள்ளது.
எரிவாயு விலை உயர்வின் காரணமாக, மின் கட்டணம், யூரியா விலை போன்றவைகளும் உயரும் அபாயம் உள்ளது. இந்தியாவில் இயற்கை எரிவாயு உற்பத்தியில் ஓ.என்.ஜி.சி. போன்ற மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களும், ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.
இயற்கை எரிவாயு விலையை உயர்த்த மத்திய அரசின் மின் துறை அமைச்சகமும், மத்திய உரத்துறை அமைச்சகமும் தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்த போதிலும் மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலைத் தெரிவித்துள்ளது. இதைப் பற்றி நேற்றையதினம் விளக்கம் அளித்த மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உள்நாட்டில் இயற்கை எரிவாயு உற்பத்தி கணிசமான அளவுக்கு குறைந்துவிட்டதால் விலையை உயர்த்த வேண்டியது அவசியமாகிவிட்டது என்று கூறியிருக்கிறார்.
மேலும் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கும், யூரியா நிறுவனங்களுக்கும் மானிய விலையில் இயற்கை எரிவாயுவை விநியோகிக்க வேண்டுமென்று சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களே மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருப்பதாகவும், அதுபற்றி பரிசீலித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் நிதியமைச்சர் உறுதி கூறியிருக்கிறார்.
பெட்ரோலியப் பொருள்கள் மற்றும் இயற்கை எரிவாயு போன்றவைகளின் விலையை உயர்த்துவதால் மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டுமென்ற நிலையில், விலையை உயர்த்தாமல், அதற்கு மாற்று வழி காண மத்திய அரசு முன் வர வேண்டுமென்று மட்டுமே கூறியுள்ளார். மறந்தும் கூட அவர் கண்டனம் என்ற சொல்லையே பயன்படுத்தவில்லை.












Click it and Unblock the Notifications