சவூதியில் தவிக்கும் தமிழர்களின் உணவுக்கு உதவுங்கள்: ரியாத் தமிழ்ச் சங்கம் கோரிக்கை
ரியாத்: சவூதியில் தவிக்கும் தமிழர்களின் உணவுத் தேவைக்கு உதவிடுமாறு ரியாத் தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ரியாத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் எஸ். ஹைதர் அலீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சட்ட மீறலாகவும், உரிய பணி ஆவணம் இன்றியும் சவூதி அரேபியாவில் தங்கிவிட்ட அயல்நாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறவோ, ஆவணங்களை நல்ல முறையில் சரிசெய்துகொள்ளவோ சவூதி அரசு அறிவித்துள்ள சலுகைக் காலம் வேகமாகக் கடந்து கொண்டிருக்கிறது. இன்னமும் பத்துக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் குடிமை அனுமதியின்மையோ, பணிச் சிக்கலோ உள்ள இந்தியர்கள் யாரேனும் இருந்தால் விரைந்து செயற்பட்டு எவ்வித அபராதமோ தண்டனையோ இன்றி தங்கள் நிலையை சட்டத்திற்குட்படும் வகையில் திருத்திக் கொள்ளும்படியோ அல்லது தூதரக உதவி பெற்று தாயகம் மீளவோ செய்யலாம் என்று இந்தியத் தூதரகம் பல்வேறு செய்தி அறிக்கைகளின் வழியே கேட்டுக் கொண்டுள்ளது.
ரியாத் தமிழ்ச் சங்கமும் தூதரகத்தின் இந்த வேண்டுகோளை தமிழர்களிடம் இதன்மூலம் மீண்டும் ஒருமுறை சமர்ப்பிக்கிறது. இது தொடர்பாக, தமிழ் அமைப்பு ஒன்றுடன் இணைந்து இரு கூட்டங்கள் நடத்தியும் சகோதரர்களின் பல்வேறு ஐயங்களுங்குத் தீர்வு கண்டுள்ளோம். ரியாத் தமிழ்ச் சங்கத்தின் சமூக சேவைப் பிரிவின் கீழ் அதன் தொண்டர்கள் பலரும் துயருறும்; வழிதேடும் இந்தியச் சகோதரர்களுக்கு பல்வேறு வகைகளில், அலுவல் மையங்களில் சகோதர உணர்வுடன் உதவி வருகிறார்கள்.
இந்நிலையில், தாயகம் திரும்பத் துடிக்கும், சட்ட ஆவணமின்றி அதிக நாள்கள் தங்கி விட்ட சகோதரர்கள் தர்ஹீல் எனப்படும் வெளியேற்று மைய அலுவலகத்தின் முன்பு கடும்வெயிலில் நாள்கணக்கில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழலும் நிலவுகிறது. அத்தகைய சகோதரர்களுக்கு உணவளிக்கவும், தாகம் தணிக்கவும் ரியாத் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் முதல் தம்மை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாதவர்கள் என்று பலரும் உதவி வருகிறார்கள். எங்களுக்கு இந்நற்காரியத்தில் உதவிய, உதவி வருகிற அனைத்துச் சகோதரர்களுக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
சலுகைக் காலம் ஜூலை 3 வரை இருப்பதால், ஜூலை 3 வரை நீடிக்க உள்ள இந்நற்காரியத்தில் பங்களித்து இறையருளைப் பெற விரும்பும் யாரும் எங்கள் நிர்வாகக் குழுவினரையோ, சமூக சேவைப் பிரிவையோ தொடர்பு கொண்டு உதவி செய்யலாம் என்பதை அறியத் தருகிறோம். உயரிய இந்நோக்கத்திற்காகப் பெறப்படும் உதவிகள் இதே நோக்கத்திற்கு மட்டுமே செலவிடப்படும் என்பதையும் உறுதி கூறுகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications