மேட்டூர் அணையில் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்வு: மின் உற்பத்தி தொடக்கம்

கர்நாடக மாநிலத்தில் பெய்யும் கனமழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் மற்றும் ஹேமாவதி உள்ளிட்ட அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன. இந்த அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று மாலை நிலவரப்படி கபினி அணையில் இருந்து விநாடிக்கு 37 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 2 அணைகளில் இருந்தும் வெளியேறும் தண்ணீர், கடந்த 5 நாட்களாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் அதிரடியாக உயர்ந்து வருகிறது.
10 அடி உயர்வு
இன்று காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 37,969 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1002 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் நீர் இருப்பு 7.17 டிஎம்சியாக உள்ளது. கடந்த 25ம் தேதி 15.51 அடியாக இருந்த நீர் மட்டம், 26ம் தேதி காலை 16.91 அடியாக உயர்ந்தது. நேற்று 19.59 அடியாகவும் இருந்தது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 29.10 அடியாக உள்ளது. ஒரே நாளில் 10 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மின் உற்பத்தி தொடங்கியது
அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் கீழ்மட்ட மதகு வழியாக தண்ணீர் வெளியேற்றுவது இன்று காலை 9 மணிக்கு நிறுத்தப்பட்டது. தற்போது அணை மின் நிலையம் வழியாக விநாடிக்கு 1002 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டூர் அணையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.
பரிசல் போக்குவரத்து நிறுத்தம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அணையின் நீர்தேக்க பகுதியில் வெளியே தெரிந்த மீனாட்சி அம்மன் கோயில், பழமையான மரங்கள் மீண்டும் நீரில் மூழ்கின. இதேபோல், நந்தி சிலை, கிறுஸ்துவ தேவாலயம், ஜலகண்டேஸ்வரர் கோயிலை சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் இவை அனைத்தும் விரைவில் மூழ்கும். அணைக்கு வரும் தண்ணீர் தொடர்ந்து அதிகரித்து வருவதால் 2வது நாளாக பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வறண்ட பகுதியில் விவசாயம் செய்த விவசாயிகள் தண்ணீர் வரத்தொடங்கியதை அடுத்து வேகமாக பயிர்களை அறுவடை செய்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications