உத்தர்காண்ட் மறுசீரமைப்புக்கு புதிய அமைப்பு- பாதிக்கப்பட்டோருக்கு சலுகைகள்: முதல்வர் விஜய் பகுகுணா அ
டேராடூன்: பெருமழை வெள்ளத்தால் உருக்குலைந்து போன உத்தர்காண்ட் மாநிலத்தை மறுசீரமைக்க புதிய அமைப்பு நிறுவப்படும் என்று அம்மாநில முதல்வர் விஜய் பகுகுணா அறிவித்துள்ளார்.
டேராடூனில் மத்திய அமைச்சர் அம்பிகா சோனி, ஜெய்ரா ரமேஷ் ஆகியோர் முதல்வர் விஜய் பகுகுணாவுடன் வெள்ள மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் விஜய் பகுகுணா, இதுவரை சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

உத்தர்காண்ட் மறுசீரமைப்பு மற்றும் மீள்கட்டமைப்புக்கான ஒரு அமைப்பு உருவாக்கப்படும். இனி ஆற்றின் கரையோரங்களில் எந்த ஒரு கட்டுமானப் பணிக்கும் அனுமதி கொடுக்கமாட்டோம். இண்டர்மீடியட் படிக்கும் மாணவர்களுக்கு நிவாரணமாக ரூ500ம் கல்லூரி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் நிவாரண நிதியாக ஒரு முறை வழங்கப்படும். அரசு வங்கிகளின் கடன்பெற்றோர் ஓராண்டுக்கு வட்டி கட்ட தேவையில்லை. குடிநீரும் மின்சாரமும் இலவசமாக கொடுக்கப்படும்.
சிறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ50ஆயிரம் முதல் ரூ1 லட்சமும் சிறு ஹோட்டல்களுக்கு ரூ2 லட்சமும் நிவாரணத் தொகை வழங்கப்படும். வெள்ளத்தில் பெற்றோரை பறிகொடுத்த குழந்தைகளை அரசே பராமரிக்கும் என்றார்.
இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், உலக வங்கி மற்று ஆசிய அபிவிருத்தி வங்கிகளிடம் இருந்து உத்தர்காண்ட் மறுசீரமைப்புக்கான உதவி கேட்கப்படும். இம்மாநிலத்தில் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும். மத்திய அரசின் நிதி உதவியுடன் 14 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும். இதேபோல் 1400 கிராமங்களை இணைக்கும் சாலைகளை மத்திய அரசு சீரமைத்து தரும். மத்திய நிதி அமைச்சக குழு விரைவில் உத்தர்காண்ட் சென்று இழப்பீட்டை மதிப்பீடு செய்யும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications