மாட்டுத் தீவன ஊழல் வழக்கு: வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய லாலுவின் மனு தள்ளுபடி!
ராஞ்சி: தமக்கு எதிரான மாட்டு தீவன ஊழல் வழக்கை வேறு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித்தலைவர் லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்த மனுவை ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.
பீகார் மாநிலத்தில் கடந்த 1990-ம் ஆண்டில் ரூ.37.7 கோடி மாட்டுத் தீவன ஊழல் தொடர்பாக விசாரணை ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 44 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வரும் 15-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரவாஸ் குமார் சிங் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் திடீரென கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணையை வேறு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். நீதிபதி பிரவாஸ்குமார் சிங், ஆளும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் மூத்த தலைவர்களின் உறவினர். இதனால் நியாயமான தீர்ப்பு வழங்கமாட்டார் என்று ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாத்வ் சார்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை இன்று விசாரித்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் வரும் 15-ந் தேதி மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாட்டுத் தீவன ஊழல் வழக்கின் தீர்ப்பு மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications