இந்து முன்னணி செயலாளர் கொலை.. கோவை, திருப்பூர், வேலூரில் கடையடைப்பு- சென்னையில் மறியல்
சென்னை: இந்து முன்னணி மாநில அமைப்புச் செயலாளர் வெள்ளையப்பன் நேற்று வேலூரில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. கோவை, திருப்பூர், வேலூர் மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
சென்னை, மதுரை உள்ளிட்ட ஊர்களில் இந்து முன்னணி அமைப்பினர் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தமிழக இந்து முன்னணி மாநில அமைப்பு செயலாளராக இருந்தவர் வெள்ளையப்பன். இவர் வேலூர் மாவட்டம் அண்ணாநகர் முத்து மண்டபம் அருகே நேற்று மாலை மர்ம கும்பல் வெட்டிக்கொல்லப்பட்டார்.

இதையடுத்து இந்து முன்னணி தொண்டர்கள் பெருமளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வேலூரில் பதட்டம் ஏற்பட்டது. பேருந்து நிலையத்தில் இருந்து காட்பாடி செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட அவர்களிடம் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நேரில் வந்து விசாரணை நடத்தி சமாதானப் படுத்தினார். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் வெள்ளையப்பன் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள இந்து முன்னணி அமைப்பு தமிழகம் முழுவதும் இன்று முழுஅடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
கோவையில் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்கடம், கரும்புக்கடை, குனியமுத்தூர், கிராஸ்கட் ரோடு, டவுன் ஹால், கோட்டை மேடு, ஒப்பணக்காரவீதி, 100 அடி ரோடு ஆகிய இடங்களில் உள்ள கடைகள் திறக்கப்படவில்லை.

இதே போன்று திருப்பூரிலும் கடையடைப்பு நடந்தது. திருப்பூர் டவுன், தாராபுரம் சாலை, காங்கேயம் சாலை, பல்லடம் சாலை, ரயில் நிலையம் ஆகிய இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பனியன் நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன.
நகர் பகுதியில் ஓடும் ஒரு சில தனியார் பஸ்களை தவிர மற்ற தனியார் பஸ்கள் ஓடவில்லை. அரசு பஸ்கள் வழக்கம்போல் ஓடின. திருப்பூர் புறநகர் பகுதிகளான அனுப்பர்பாளையம், பெருமாநல்லூர், குன்னத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

மேட்டுப்பாளையம் பஸ்நிலையம், ஊட்டி மெயின் ரோடு, காரமடைரோடு, சிறுமுகை ரோடு, அன்னூர் ரோடு ஆகிய இடங்களில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. ஒரு சில தனியார் பஸ்கள் மட்டும் இயங்கின.
பல்லடத்திலும் பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.
வேலூரிலும்
வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்ட வேலூரிலும் இன்று கடையடைப்பு நடந்து வருகிறது.
சென்னை, மதுரையில் மறியல்
சென்னையிலும், மதுரையிலும் சாலை மறியல் போராட்டங்கள் நடந்துள்ளன. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலம் அருகேயும், வடபழனியிலும் இந்து முன்னணியினர் சாலை மறியல் செய்தனர்.
வடபழனியில் சுமார் 200 பேர் சாலை மறியலில் ஈடுபட்டதால் நான்கு பக்கமும் வாகனங்கள் தேங்கி நின்றன. இதேபோல் மதுரையிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

4 தனிப்படைகள்
கொலையாளிகளைப் பிடிக்க நான்கு டிஎஸ்பிக்கள் தலைமையில் 4 தனிப்படைகளை காவல்துறை அமைத்துள்ளது.












Click it and Unblock the Notifications