தனியார் வங்கிகளுக்கான லைசென்ஸ்... அவ்வளவாக ஆர்வம் காட்டாத நிறுவனங்கள்!
மும்பை: தனியார் வங்கிகள் தொடங்குவதற்கான லைசென்ஸ் பெற ஏனோ இந்த முறை பெரிய நிறுவனங்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.
ஒரு காலத்தில் பெரும்பாலும் அனைத்தும் தனியார் கையில் இருந்தன. பொருளாதாரம் ஒரு நிலையில் இல்லாமல் அல்லாடிக் கொண்டிருந்தது. பெரும் முதலாளிகளே வங்கிகளை நடத்தி வந்தனர். இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் 1970ல் அனைத்து வங்கிகளையும் நாட்டுடைமை ஆக்கினார். அதன் பிறகே அரசின் கட்டுப்பாட்டுக்குள் பொருளாதாரம் வந்தது.
ஆனால் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பிவி நரசிம்மராவ் காலத்தில், வங்கித் துறையில் மீண்டும் தனியாருக்கு அனுமதி அளித்தது மத்திய அரசு. 1993-ல் தனியார் வங்கிகளுக்கான லைசென்ஸ் அறிவிப்பு வெளியான போது, நாட்டின் பெரும் தனியார் நிறுவனங்கள் அனைத்துமே லைசென்ஸ் பெற போட்டி போட்டன. 113 நிறுவனங்கள் லைசென்ஸுக்கு மோதின.
சரியாக பத்தாண்டுகள் கழித்து 2003-ல் மீண்டும் லைசென்ஸுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அப்போதும் 110 நிறுவனங்கள் முட்டி மோதின.
ஆனால் இப்போது 2013-ல் வங்கிகள் தொடங்க லைசென்ஸ் அறிவிக்கை வெளியானபோது, பெரிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை. வெறும் 26 நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளன, அதுவும் கடைசி நாளான இன்று.
ஏன்.. என்னாச்சு... உலகின் 10வது பெரிய பொருளாதாரமான இந்தியாவின் வங்கித் துறை அத்தனை மோசமாகிவிட்டதா?
உண்மைதான். இந்தியாவில் முன்பு போல தனியார் நிறுவனங்கள் வங்கித் துறையில் முதலீடு செய்யத் தயங்கக் காரணம், 50 சதவீத மக்கள் வங்கி சேவைகளை பயன்படுத்தத் தெரியாதவர்களாக இருப்பதுதானாம்.
லைசென்ஸை சரண்டர் செய்த வங்கிகள்
இந்தியாவில் வங்கிகள் நடத்த பிரபல வெளிநாட்டு நிறுவனங்கள் மார்கன் ஸ்டேன்லி, யுபிஎஸ் மற்றும் கோஸ்ட்மேன் சாஷ் போன்றவை பல ஆண்டு முயற்சிக்குப் பிறகு லைசென்ஸ் பெற்றும், அவற்றை வேண்டாம் என சரண்டர் செய்துவிட்டன. காரணம், இங்குள்ள அரசின் ரொக்க இருப்பு வீதம், எஸ்எல்ஆர் போன்றவை தங்களுக்கு சாதகமாக இல்லை என்பதால். மரபு ரீதியிலான வணிக வங்கிகளை துவங்கினால் பெரும் முதலீடு தேவை, அதிலிருந்து பெரும் லாபம் பார்க்க நீண்ட காலம் ஆகும் என்பதால், பெற்ற லைசென்ஸை திரும்பக் கொடுத்துவிட்டன இந்த வங்கிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்வம் காட்டாத நிறுவனங்கள்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ், சுனில் மித்தலின் பார்தி குழுமம், மஹிந்திரா குழுமம், சுந்தரம் பைனான்ஸ் போன்றவை லைசென்ஸுக்கு விண்ணப்பிக்கவே இல்லை.
யார் யார் விண்ணப்பித்துள்ளனர்?
ஆதித்ய பிர்லா நுவோ, டாடா சன்ஸ், எல் அண்ட் டி பைனான்ஸ், ரெலிகேர். ஐடிஎப்சி, இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ், இன்டியா இன்போலைன், மாக்மா பின்கார்ப், ஸ்ரீராம் கேபிடல், பந்தன் பைனான்சியல் சர்வீஸஸ், ரிலையன்ஸ் கேபிடல், இந்தியா போஸ்ட் (அரசு நிறுவனம்), ஈடல்வைஸ் கேபிடல், ஜனலட்சுமி பைனான்சியல் சர்வீசஸ், வீடியோகான் உள்பட 26 நிறுவனங்கள். இவற்றில் நான்கில் ஒரு நிறுவனத்துக்கு லைசென்ஸ் கிடைக்கும்.
ஆக இந்த ஆண்டு 6 புதிய தனியார் வங்கிகள் வரவிருக்கின்றன.












Click it and Unblock the Notifications