உளவு பார்த்த அமெரிக்கா.. நியாயப்படுத்திய சல்மான் குர்ஷித்.. சிபிஎம் கடும் கண்டனம்!
டெல்லி: அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தை அந்நாட்டு அரசு உளவு பார்த்ததை நியாயப்படுத்தி கருத்து தெரிவித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள இந்தியா தூதரகத்தை அந்நாடு உளவு பார்த்தது குறித்து கருத்து தெரிவித்த சல்மான் குர்ஷித், அமெரிக்கா உளவு பார்க்கவில்லை.. கம்யூட்டர் அழைப்பு முறைகளை ஆய்வு மட்டுமே செய்தது என்று கூறியிருந்தார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் உளவு பார்க்கப்பட்டதைப் பற்றி கவலைபடாத ஒருவரை, இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சராகக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளான பிரான்ஸ், ஜெர்மன் நாடுகள் கூட தங்கள் நாடுகளை உளவு பார்த்ததற்கு கண்டம் தெரிவித்துள்ளன. இந்த நேரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சரோ உளவு பார்க்கவில்லை... கம்ப்யூட்டர் அழைப்புகளை ஆய்வு செய்தது எனக் கூறியிருப்பது வெட்கக்கேடானது.
மன்மோகன் சிங் அரசு, அமெரிக்காவின் உளவு வேலைக்கு எதிராக உறுதியான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். இத்தகைய உளவு நடவடிக்கைகளை அமெரிக்கா உடனடியாக நிறுத்த இந்தியா கேட்டுக்கொள்ள வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications