காங்கிரசுடன் திமுக கூட்டணியா? உள்நோக்கத்துடன் செய்யும் பிரசாரம்.. கருணாநிதி

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் உதவி கேட்கும் திமுக, ஈழப் பிரச்னையை மறந்துவிட்டதா என்பதை கருணாநிதிதான் விளக்க வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார். அவருக்கான என் விளக்கங்கள்:
தோழமை கட்சிகளுக்கு விட்டுக் கொடுப்பு
2004-ஆம் ஆண்டு ராஜ்யசபா தேர்தல். திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு, ஓர் இடத்தில் சுலபமாக வெற்றிபெறலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் திமுக அப்படிச் செய்யாமல், கட்சியின் 30 உறுப்பினர்கள் வாக்குகளும் பாமக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் வழங்கப்பட்டன. தற்போது என்னைக் கேள்வி கேட்கும் அன்புமணி ராமதாசும், சுதர்சன நாச்சியப்பனும் வெற்றிபெற மனப்பூர்வமாக ஒத்துழைத்தோம். மாநிலங்களவை உறுப்பினராக அன்புமணியை வெற்றிபெறச் செய்ததால்தான் அவர் மத்திய அமைச்சராக முடிந்தது. 2007-ஆம் ஆண்டு திமுகவின் உறுதியான, கண்ணியமிக்க ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்ட கட்சியின் வேட்பாளர் டி.ராஜா வெற்றிபெற்றார்.
2008-ஆம் ஆண்டு ராஜ்யசபா தேர்தல் நடைபெற்றபோது, திமுக 96 இடங்களைப் பெற்றிருந்தது. திமுக 3 இடங்களில் வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தபோதிலும், திமுக 2 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஓரிடத்திலும் போட்டியிட்டு வெற்றிபெற்றோம். மார்க்சிஸ்ட்டுகள் சார்பில் போட்டியிட்ட டி.கே.ரங்கராஜனின் மனுவை நான்தான் முன்மொழிந்தேன். அவர் வெற்றிபெற்றார். காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் வெற்றி பெற்றனர்.
தமாகாவுக்கு கை கொடுத்தோம்..
1996-ஆம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டதால் மூப்பனார் தமாகாவைத் தொடங்கி, திமுகவுடன் கூட்டணி அமைத்தார். மாபெரும் வெற்றிபெற்றோம். அப்போது, தமாகாவில் இருந்துகொண்டு, காங்கிரஸ் கட்சியின் சார்பாக பெற்ற ராஜ்யசபா உறுப்பினர் பொறுப்புகளில் நீடிப்பது சரியில்லை என்று மூப்பனார், ஜெயந்தி நடராஜன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் 1997 செப்டம்பர் 9-ந் தேதி தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். காலியாகிவிட்ட அந்த இடங்களுக்குத் தேர்தல் வந்தது. அப்போது திமுகவுக்கு 165 இடங்கள் இருந்தன. திமுக சார்பில் 3 இடங்களிலும் வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெறலாம் என்ற நிலைமை. ஆனால் அப்படிச் சுயநலத்தோடு செயல்படாமல், காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ், ஜெயந்தி நடராஜன், அப்துல்காதர் ஆகியோர் தமாகா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஈழப் பிரச்சனையை மறந்துவிடவில்லை
தோழமைக் கட்சிகளிடம் எந்த அளவுக்கு உறவோடும், விட்டுக் கொடுக்கும் மன்பான்மையோடும் இருந்தோம் என்பதற்கு இவையே உதாரணம். எனவே ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் ஆதரவைப் பெற்றோம் என்பதற்காக ஈழப் பிரச்னையை மறந்துவிடவும் இல்லை. எப்போதும் விடவும் மாட்டோம். திமுக ஏதோ கொள்கைகளையெல்லாம் விட்டுவிட்டு, சந்தர்ப்பவாதத்தன்மையோடு நடந்து கொண்டது என்றும், காங்கிரஸோடு கூட்டணி அமைத்துக் கொண்டது என்பதும் உள்நோக்கத்தோடு செய்யும் பிரசாரங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications