ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு மவுசு குறைந்தது… 4,430 பேர் மட்டுமே விண்ணப்பம்
விருதுநகர்: ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு நடப்பு கல்வியாண்டியாண்டில் 4,430 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் 539 அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான அரசு ஒதுக்கீட்டில் 17 ஆயிரத்து 45 சீட்டுக்கள் உள்ளன. இந்த படிப்புக்கான மவுசு குறைந்து வருவதால், இந்த ஆண்டு 4 ஆயிரத்து 430 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
படித்து முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தால் ஒன்றிரண்டு ஆண்டுகளில் கைமேல் வேலை என்பது ஆசிரியர் பயிற்சி படித்தவர்களுக்கு செல்லும். இதனால் பி.எட் படித்தவர்கள் கூட பேசாமல் ஆசிரியர் பயிற்சி படிப்பு படித்திருக்கலாமே என்று ஏங்கும் அளவிற்கு இருந்தது. அரசு பள்ளிகளில் எளிதாக வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நின்றது கிராமப்புற மாணவர்கள் இந்த படிப்பில் சேர ஆர்வம் காட்டி வந்தனர். இதனால், கடந்த சில வருடங்களாக இந்த படிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அரசு பயிற்சி நிறுவனங்கள் தவிர தனியார் பயிற்சி நிறுவனங்களும் ஆங்காங்கே தொடங்கப்பட்டன.
தற்போது அரசு பள்ளிகளில் தகுதி தேர்வு மூலம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதால், ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படித்தாலும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு ஆசிரியராக முடியும் என்பதால் இந்த படிப்பில் தற்போது யாரும் அக்கறை செலுத்தவில்லை.
இந்நிலையில் 2013-14 ஆம் கல்வியாண்டுக்கான ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான கவுன்சிலிங் வரும் 8 ஆம் தேதி தொடங்கி, 15ஆம் தேதி வரை நடக்கிறது. ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் நடத்தப்படும் இந்த கவுன்சிலிங்கில் இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டுக்கு 17 ஆயிரத்து 45 சீட்டுக்கள் கிடைத்துள்ளன. ஆனால், இந்த ஆண்டு வெறும் 4 ஆயிரத்து 430 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இதில் 429 பேர் மாணவர்கள், 4001 பேர் மாணவிகள் ஆவர்.
ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு குறைந்த அளவு மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளதால் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் கலக்கம் அடைந்துள்ளன.












Click it and Unblock the Notifications