இந்து முன்னனி செயலாளர் உடல் சொந்த ஊரில் தகனம்- பதட்டம்
சங்கரன்கோவில்: வேலூரில் கொலையான இந்து முன்னனி மாநில செயலாளர் வெள்ளையப்பன் உடல் சொந்த ஊரான துரைசாமியாபுரத்தில் தகனம் செய்யப்பட்டது. இதையொட்டி அங்கு பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்து முன்னனி மாநில செயலாளர் வெள்ளையப்பன். திருமணம் ஆகாத இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூரில் வசித்தபடியே கட்சி மற்றும் ஆன்மிக பணியில் ஈடுபட்டு வந்தார். இவர் கடந்த 1ம் தேதி வேலுரில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள துரைசாமியாபுரம். படுகொலை செய்யப்பட்ட வெள்ளையப்பன் உடல் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உடல் ஊர்வலமாக வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதையடுத்து வெள்ளையப்பன் உடல் நேற்று முன்தினம் மாலை தனி விமானத்தில் எடுத்து வரப்பட்டு நேற்று அதிகாலை 2 மணி அளவில் ராஜபாளையம் வந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் புளியங்குடி வழியாக உடலை கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் சங்கரன்கோவில் வழியாக கொண்டு செல்ல வேண்டுமென இந்து முன்னனி நிர்வாகிகள் தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உடல் சங்கரன்கோவில் எடுத்து வரப்பட்டது. நேற்று அதிகாலை 3.30 மணி்க்கு சொந்தஊரான துரைசாமியாபுரத்திற்கு வெள்ளையப்பன் உடல் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு இந்து முன்னனி முக்கிய நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு துரைசாமியாபுரம் இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. உடல் தகனத்தை ஓட்டி சங்கரன்கோவில், சேர்ந்தமரம் பகுதியில் ஏடிஎஸ்பி மகேந்திரன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications