திமுகவுக்கு எதிரான 'பரிதி'யாட்டம்... மதுரையிலிருந்து ஆரம்பிக்கிறது!

மதுரையில் சில தினங்களுக்கு முன்பு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டம் போட்ட அதே இடத்தி்ல பரிதியின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். அந்த மேடையில் நின்றபடி இத்தனை காலம் தான் இணைந்து செயல்பட்டு வந்த ஸ்டாலினை மிகக் கடுமையாக வசை பாடப் போகிறார் பரிதி என்று பரபரப்பாக பேசப்படுகிறது.
திமுகவின் தளபதியான மு.க.ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக இருந்தவர் பரிதி. பின்னர் இது அப்படியே மெதுவாக கரையத் தொடங்கியது. தனக்கு எதிராக கடந்த சட்டசபைத் தேர்தலில் கட்சியினர் சிலரே செயல்பட்டதால்தான் தான் தோல்வியைத் தழுவ நேரிட்டதாக பரிதி குற்றம் சாட்டினார். இதையடுத்து அவரை கட்சிக்குள்ளேயே கட்டம் கட்டி வைத்தனர்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்து அதிமுகவில் இணைந்து கொண்டார் பரிதி. இது திமுகவினரை பெரும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. காரணம், பரிதியின் குடும்பமே பாரம்பரியமான திமுக குடும்பம் ஆகும். சென்னையில் திமுகவை வளர்த்த முன்னோடிகளில் ஒருவர் பரிதியின் தந்தையான மறைந்த இளம்வழுதி.
அதிமுகவில் சேர்ந்த பின்னர் ஜெயா டிவியில் பரிதி இளம்வழுதி பேசுகையில், கோபாலபுரத்து கொள்ளையர்கள் என்று கருணாநிதி குடும்பத்தை கடுமையாக சாடிப் பேசியிருந்தார். இந்த நிலையில் முதல் பொதுக் கூட்டத்தில் அவர் பங்கேற்கவுள்ளார் - அதுவும் மதுரையில்.
ஜூலை 13ம் தேதி மதுரை டிஎம் கோர்ட் அருகே நடைபெறவுள்ள அதிமுக அரசின் ஈராண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் பரிதி கலந்து கொண்டு பேசவுள்ளார். அதிமுகவில் சேர்ந்த பின்னர் அவர் பங்கேற்கும் முதல் கூட்டம் இதுதான்.
கடந்த 30-ம் தேதிதான் இதே இடத்தில் ஸ்டாலினின் பொதுக் கூட்டம் நடந்தது. அப்போது முதல்வர் ஜெயலலிதாவையும், அதிமுக அரசையும் கடுமையாக விமர்சிததுப் பேசியிருந்தார் ஸ்டாலின். இந்த நிலையில் அதே இடத்தில் கூட்டம் போடப்படுவதால் பரிதி மூலம் ஸ்டாலினை கடுமையாக வசை பாடப் போகிறது அதிமுக என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இடத்திற்கு இன்னொரு விசேஷமும் இருக்கிறது. அதாவது மதிமுகவிலிருந்து விலகி அதிமுகவுக்கு வந்த நாஞ்சில் சம்பத்தும் இதே இடத்தில்தான் தனது முதல் கூட்டத்தைப் போட்டார். மேலும் இன்னோவா காரையும் முதல்வரிடமிருந்து அன்பளிப்பாக பெற்றார்.
அப்ப இன்னொரு இன்னோவா கார் ரெடி....!












Click it and Unblock the Notifications