வறுமையையும், ஏழ்மையையும் போக்குவது அரசுகளின் கடமை: கருணாநிதி

மூன்று நாள் சுற்றுப்பயணமாக திருவாரூருக்கு சென்றுள்ள தி.மு.க தலைவர் கருணாநிதி, சன்னதி தெருவிலுள்ள முரசொலி மாறன் வீட்டிற்கு சென்றுவிட்டு பிறகு காட்டூரிலிருக்கும் அவரது தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்திற்கு சென்று வணங்கினார்.
பிறகு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நலநிதி வழங்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு கொத்தமங்கலத்தை சேர்ந்த சமீமா ஜாப்ரினுக்கு மேற்ப்படிப்பு படிக்க கல்வி உதவித்தொகையாக 20,000 ரூபாயும், வலங்கைமானை சேர்ந்த கார்த்திக் ராஜாவுக்கு கல்வி உதவித்தொகை 20,000 ரூபாயும், கொராடாசேரியிலுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியளவில் முதலிடம் பெற்ற 10ம் வகுப்பு உஷா, 12ம் வகுப்பு புனிதா, 10ம் வகுப்பு சுபாஷ், 12ம் வகுப்பு சுரேஷ்குமார், ஆகிய நான்கு பேருக்கும் தலா 4 கிராம் தங்க காசுகளை வழங்கி பாராட்டினார்.
அதோடு வீடு எரிந்து போனதால் பாதிக்கப்பட்ட முகமது ஹனி, அரபு நிஷா தம்பதிக்கு 10,000ரூபாய் உதவி அளித்து ஆறுதல் கூறினார். அதோடு 2,000க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு உணவு பொட்டலம் வழங்கினார்.
நலநிதி வழங்கி பேசிய கருணாநிதி கூறியதாவது:
நான் திருவாரூர் எம்.எல்.ஏ மட்டுமல்ல. லட்சோபலட்சம் தொண்டர்களை உடன்பிறப்புகளாக பெற்றிருக்கிறேன் என்பது அளவற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல நான் உங்களை காணவந்ததிலும் எல்லையில்லா ஆனந்தமடைந்திருக்கிறேன்.
நம் நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் ஏழை எளிய மக்களுக்கு இல்லாமை, இயலாமை, வறுமையை ஒழிக்க மக்களுக்கு உதவிகளை வழங்க வேண்டிய நிலையிலேயே நாம் இருக்கிறோம். எந்த ஒரு மாநில அரசும் மத்திய அரசும் பொதுமக்களின் வறுமையையும், ஏழ்மையையும் போக்கவேண்டும். அதுவே அவர்களது தலையாய கடமை. அதை எதிர்கட்சியாக இருக்கும் திமுக தொடர்ந்து செய்து வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications