வீடு திரும்பினார் திவ்யா... 2 கிராமங்களில் 70 போலீஸ் பாதுகாப்பு

செல்லன்கொட்டாய் கிராமம்தான் திவ்யாவின் ஊர். அந்த ஊரில் உள்ள தனது வீட்டுக்குத் திவ்யா தனது தாயாருடன் திரும்பியுள்ளார். அதேபோல அருகில் உள்ள நாய்க்கன் கொட்டாய் நத்தம் காலனியில் இளவரசன் வீடு உள்ளது.
உயர்நீதிமன்றம் திவ்யாவுக்கும், அவரது தாயாருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வீடு திரும்பிய திவ்யாவுக்கும், தாயார் தேன்மொழிக்கும் பாதுகாப்புக்காக போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
செல்லன்கொட்டாய் கிராமத்தில் 2 இன்ஸ்பெக்டர்கள், 2 எஸ்.ஐ.க்கள் மற்றும் 30 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே போல, நத்தம் காலனியில் 2 இன்ஸ்பெக்டர்கள், 2 எஸ்.ஐ.க்கள் மற்றும் 40 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு கிராமங்களிலும் 70 போலீசார் 2 ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், குண்டல்பட்டி அடுத்த செல்லன்கொட்டாய் செல்லும் பிரிவு சாலையிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செல்லன்கொட்டாய் கிராமத்தில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக செல்பவர்கள் தீவிர விசாரணைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். நத்தம் காலனியில் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போலீசாருடன் கோணங்கிநாயக்கன அள்ளி கிராம நிர்வாக அதிகாரி வெங்கடாசலமும் தங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 9ம் தேதி, வீட்டை விட்டு வெளியேறிய திவ்யா, மறுநாள் 10ம் தேதி இளவரசனை திருமணம் செய்துகொண்டார். கோர்ட்டில் இளவரசனை பிரிந்து தாயுடன் செல்வது என முடிவு எடுத்தார். மேலும் இனிமேல் இளவரசனுடன் சேர மாட்டேன், தாயாருடன்தான் இருப்பேன் என்று அவர் அறிவித்தார். இந்த நிலையில்தான் இளவரசனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இளவரசன் மரணம் திவ்யாவை வெகுவாக பாதித்துள்ளதாக தெரிகிறது. எப்போதும் அழுதபடியும், சாப்பிடாமலும், சோகமே உருவாக பிரமை பிடித்தாற் போல அவர் வீட்டுக்குள் இருப்பதாக அவரது தாயார் தேன்மொழி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications