உத்தரகாண்ட் சென்ற சென்னை தொழில் அதிபர் மாயம்: மனைவி மட்டும் திரும்பினார்
சென்னை: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு புனிதயாத்திரை சென்ற தொழிலதிபரை கடந்த 20 நாட்களுக்கு மேலாகியும் கண்டுபிடிக்க முடியாமல் அவரது மனைவி சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.
சென்னை அண்ணாநகரை சேர்ந்த தொழில் அதிபர் சந்திரமவுலி. இவர் தனது மனைவி ரமாவுடன் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சார்தாம் யாத்திரை சென்றிருந்தார். அங்கு இமாலய சுனாமியில் சிக்கி மலை மீதிருந்து தவறி விழுந்தனர். இதில் ரமா மட்டும் பலத்த காயத்துடன் சென்னைக்கு திரும்பினார்.
கடந்த மாதம் 17-ந் தேதி மலைச்சரிவில் ரமா சிக்கிய போது சந்திரமவுலி அவருக்கு பின்னால் தான் வந்துள்ளார். அதன் பின்னர் தான் அவரை காண வில்லை. சந்திரமவுலியை கண்டு பிடிப்பதற்காக, உத்தரகாண்டில் முகாமிட்டுள்ள தமிழக மீட்பு குழுவினரும் தீவிரம் காட்டி வருகிறார்கள். சென்னையில் இருந்து அவரது போட்டோவும் மீட்பு குழுவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனை வைத்துக் கொண்டு சந்திர மவுலியை கடந்த 20 நாட்களாக தேடி வருகிறார்கள். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடிய வில்லை. எனவே மலைச் சரிவில் சிக்கி சந்திரமவுலி உயிரிழந்தாரா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.
சென்னையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர், தனது கணவர் சந்திரமவுலி எப்படியாவது மீண்டு வருவாரா? என்கிற ஏக்கத்துடன் நாட்களை நகர்த்தி வருகிறார். சந்திரமவுலி காணமல் போனது அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.