என்.எல்.சி போராட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க ஹைகோர்ட் மறுப்பு
சென்னை: என்.எல்.சி. தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
என்.எல்.சி நிறுவனத்தின் 5 சதவிகித பங்குகளை விற்பனை செய்வதை எதிர்த்து 30,000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து என்எல்சி நிறுவன நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் என்.எல்.சி. தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி டி.அரிபரந்தாமன் விசாரித்தார். இந்த மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று 17 தொழிற்சங்கங்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து என்எல்சி சார்பில் அவசரம் அவசரமாக அப்பீல் தாக்கல் செய்யப்பட்டது. இதை தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் ராஜேஷ் குமார் அகர்வால், நீதிபதி ராஜா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
மனுவைவிசாரித்த நீதிபதிகள் அவசர உத்தரவைப் பிறப்பித்தனர். அதில், ஒட்டுமொத்த நிலவரத்தையும் கருத்தில் கொண்டு, பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை முடியும் வரை, 3-ந் தேதி நள்ளிரவில் இருந்தோ அல்லது வேறு தேதியில் இருந்தோ, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதற்கு 17 தொழிற்சங்கங்களுக்கும் தடை விதிக்கிறோம். இந்த அப்பீல் வழக்கில் 17 தொழிற்சங்கங்களும் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
எனினும் தடையை மீறி போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தடையை நீக்கக் கோரி என்.எல்.சி. தொழிலாளர்களின் சார்பில் வழக்கறிஞர் ரமேஷ் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஆர்.கே. அகர்வால் முன்பு விசாரணைக்கு வந்தது. வேலை நிறுத்தத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்த நீதிபதி, தொழிலாளர்கள் முதலில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றட்டும், மனு மீதான விசாரனையை பிறகு பார்க்கலாம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications