குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமரானால்தான் நாட்டை பாதுகாக்க முடியும்: ராம்தேவ்
புனேயில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய ராம்தேவ், இந்த நாட்டின் இளைஞர்கள் நரேந்திர மோடியை ஆதரிக்கின்றனர். காங்கிரஸ் கட்சியால் முன்னிறுத்தப்படும் ராகுல்காந்தியால் நாட்டின் முன் உள்ள எந்த பிரச்சனைகளைப் பற்றியும் பேச முடியவில்லை. உத்தர்காண்டில் பேரழிவு ஏற்பட்ட போது நரேந்திர மோடி உடனே அங்கு சென்றார். ஆனால் ராகுல் காந்தியோ பிறந்த நாள் கொண்டாடிக் கொண்டிருந்தார்.
குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் தொடர்ந்து வெற்றி வாகை சூடுபவர் நரேந்திர மோடி. ஆனால் ராகுல் காந்தி பொறுப்பேற்றுக் கொண்ட தேர்தல்கள் அனைத்திலுமே தோல்விதான். நாட்டில் அரிசி விலை உயர்வு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் இருக்கும் போது மதமோதல்களைப் பற்றி மட்டுமே காங்கிரஸ் பேசுகிறது.
நாங்கள் எழுப்புகிற பிரச்சனைகளுக்கு யார் ஆதரவு தருகிறார்களோ அவர்களை லோக்சபா தேர்தலில் ஆதரிப்போம். நான் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன். அதற்காக அவரது கட்சியையே ஒட்டுமொத்தமாக ஆதரிப்பதாக அர்த்தம் இல்லை என்றார்.
இதனிடையே பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலரும் மகாராஷ்டிரா மாநில கட்சி பொறுப்பாளருமான ராஜிவ் பிரதாப் ரூடி, ராம்தேவை சந்தித்து ஆசி பெற்றார்.