கூடங்குளம்: அணு உலையில் யுரேனியம் நிரப்பும் பணி தொடக்கம்... சில தினங்களில் மின் உற்பத்தி

கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதலாவது அணு உலை ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டது. இதில் எரிபொருள் நிரப்ப கடந்தாண்டு செப்டம்பரில் ஒப்புதல் தெரிவித்த அணுசக்தி ஒழுங்குமுறை வாரிய அதிகாரிகள், பின்னர் அணு உலையில் பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இதனையடுத்து முதலாவது அணு உலையில் மின் உற்பத்திக்கான முதல்கட்ட சோதனையைத் தொடங்க அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் நேற்று அனுமதி அளித்தது.
இதுதொடர்பாக ஒழுங்குமுறை வாரியம் அறிவிப்பு வெளியிட்டது அதில், பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் சோதனை முடிவுகளின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டிருப்பதை உறுதிசெய்யப்பட்ட பின்பு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் ஒழுங்குமுறை வாரியம் அறிவித்துள்ளது.
இதன்மூலம் அணு உலையில் முதன்முறையாக கட்டுப்படுத்தப்பட்ட அணு பிளவு சோதனையை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மின் உற்பத்திக்கான முதல்கட்ட நடவடிக்கை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
இதன்படி, அணு உலையின் தன்மையை உறுதிசெய்ய பலமுறை குறைந்த மின் ஆய்வு நடத்தப்படும் என ஒழுங்குமுறை வாரியம் தெரிவித்துள்ளது. அதன்பின்னர், அணு உலையின் மின் உற்பத்தி திறனை படிப்படியாக உயர்த்த அனுமதி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து எரிபொருள் நிரப்பும் பணிகள் நள்ளிரவு முதலே தொடங்கப்பட்டது. எனினும், மின் விநியோகம் செயல்பாட்டுக்கு வர ஒன்றரை மாதங்கள் ஆகும் என்று அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதலில், குறைந்த அளவே மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றும், பின்னர், படிப்படியாக மின் உற்பத்தியை அதிகரித்து, மொத்த மின் உற்பத்தி திறனான ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை, முதல் அணு உலை எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிப்பாளர்கள் அதிர்ச்சி
அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி கிடைத்ததும், கூடங்குளம் அணுசக்தித் திட்ட அதிகாரிகள் விரைந்து செயல்பாட்டைத் தொடங்கிவிட்ட நிலையில், அணுசக்தி எதிர்ப்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மின்உற்பத்திக்கான முதற்கட்ட ஆய்வுக்கு அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அனுமதி வழங்கியதற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. கூடங்குளம் பகுதி மக்களுடன் கலந்தாலோசித்து அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்றும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications