சென்னை: உறவுப் பெண்ணுடன் பார்க்கில் பேசியவருக்கு கழுத்தில் கத்திக் குத்து....!
சென்னை: உறவுக்காரப் பெண்ணுடன் பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த வாலிபரை அவரது உறவினரும், நண்பரும் சேர்ந்து கழுத்தில் கத்தியால் குத்தி அறுத்து விட்டுத் தப்பிய செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் 27 வயதான முத்து. இவர் 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டுக்கு அருகே உள்ள பூங்காவில் அமர்ந்து தனது உறவுக்காரப் பெண் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென இரண்டு பேர் அங்கு வந்தனர். அவர்கள் முத்துவை சரமாரியாக தாக்கினர். பின்னர் கழுத்தில் கத்தியால் குத்தி அறுத்து விட்டுத் தப்பினர்.
ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த முத்துவை அங்கிருந்தவர்கள் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரும் விரைந்து வந்தனர். தனது உறவினரான பிரகாஷ் என்பவரும், அவரது நண்பரும் சேர்ந்துதான் தன்னைத் தாக்கி குத்தியதாக முத்து வாக்குமூலம் அளித்தார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர். முத்துவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.